search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    பேரையூர் அருகே மழைக்கு வீட்டுச் சுவர் இடிந்து முதியவர் பலி

    பேரையூர் அருகே மழைக்கு வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
    பேரையூர்:

    பேரையூர் நாகையாபுரம் அருகில் உள்ள தங்களாச்சேரியை சேர்ந்தவர் முத்தன் (வயது 70). இவர் கடந்த 6-ந்தேதி காலை அருகில் உள்ள வீட்டின் சுவர் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் சுவர் இடிந்து முத்தன் மீது விழுந்தது.

    இதில் படுகாயம் அடைந்த முத்தன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் இறந்து விட்டார். இது குறித்து நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பேரையூர் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் இப்பகுதியில் உள்ள மண் வீடுகள் இடிந்து விழுவது வாடிக்கையாகிவிட்டது. நேற்று குன்னத்தூர், மேலத்திருமாணிக்கம், காமாட்சிபுரம், ஆவல்சேரி, ஓனாப்பட்டி, சாப்டூர் ஆகிய பகுதியில் உள்ள 9 மண் வீடுகள் இடிந்து விழுந்தன. இது வரை பேரையூர் தாலுகா பகுதியில் மொத்தம் 36 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து உசிலம்பட்டி கோட்டாட்சியர் ராஜ்குமார் கூறுகையில், “ஒரு பகுதியாக சேதம் அடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கிராமங்களில் கண்மாய் நிரம்பியது, கண்மாய் உடைப்பு ஆகிய தகவல் வந்தால் அங்கு உடனுக்குடன் ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறையினர் சென்று நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பாதுகாப்பற்ற கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் குடியிருப்பவர்கள் முன்னெச்சரிக்கையாக அருகில் உள்ள முகாம்களை பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.
    Next Story
    ×