search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையை அடுத்த கோணக்கடுங்கலாற்றில் ஏற்பட்ட உடைப்பை அடைக்கும் பணி நடைபெற்றது
    X
    தஞ்சையை அடுத்த கோணக்கடுங்கலாற்றில் ஏற்பட்ட உடைப்பை அடைக்கும் பணி நடைபெற்றது

    டெல்டா மாவட்டங்களில் தொடர் மழையால் ஆறு, பாசன வாய்க்கால்களில் 70 இடங்களில் உடைப்பு

    டெல்டா மாவட்டங்களில் தொடர் மழையால் ஆறு, பாசன வாய்க்கால்களில் 70 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. 98 இடங்களில் தண்ணீர் செல்ல முடியாத அளவிற்கு செடி, கொடிகளால் காணப்பட்ட அடைப்பு சீரமைக்கப்பட்டது.
    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும்.

    அதன்படி இந்த ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி அணை திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தஞ்சை மாவட்ட எல்லையில் உள்ள கல்லணைக்கு வந்து அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணைக்கால்வாய் ஆகிய ஆறுகளில் பிரித்து விடப்படும். இதன் மூலம் டெல்டா மாவட்டம் மட்டும் அல்லாது புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு பகுதி, கடலூர் மாவட்டம் என மொத்தம் 12½ லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. குறிப்பிட்டநேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கப்பட்டது. தற்போது சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவும் இலக்கை தாண்டி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் மூலம் 529 ஏ பிரிவு, 2,084 பி பிரிவு, 1980 சி பிரிவு, 783 டி பிரிவு, 182 ஈ பிரிவு பாசன வாய்க்கால்களும் உள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் காவிரி, வெண்ணாறு மூலம் 572 ஏ பிரிவு, 3,141 பி பிரிவு, 3,826 சி பிரிவு, 1,957 டி பிரிவு, 501 ஈ பிரிவு பாசன வாய்க்கால்களும் உள்ளன.

    நாகை மாவட்டத்தில் காவிரி, வெண்ணாறு மூலம் 599 ஏ பிரிவு, 2,694 பி பிரிவு, 3,542 சி பிரிவு, 3,170 டி பிரிவு, 457 ஈ பிரிவு பாசன வாய்க்கால்களும் உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லணைக்கால்வாய் மூலம் 7 ஏ பிரிவு, 24 பி பிரிவு பாசன வாய்க்கால்களும் உள்ளன.

    இந்த வாய்க்கால்கள் மூலம் பாசனத்துக்கு தண்ணீர் விடப்பட்டு வருகிறது. மேலும் காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாயில் 36-க்கும் மேற்பட்ட கிளை ஆறுகளும் உள்ளன. டெல்டா மாவட்டங்களில் நிவர் புயல் காரணமாக மழை பெய்யத்தொடங்கியதில் இருந்து மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு விட்டது. மழை வெள்ளம் வடிவதற்கு ஏதுவாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் புரெவி புயல் காரணமாக கடந்த 7 நாட்களாக மழை பெய்து வருகிறது.

    இதனால் டெல்டா பகுதி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பல பகுதிகளில் இன்னும் மழை வெள்ளம் வடியாமல் உள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் அழுகி காணப்படுகின்றன. இந்த மழை காரணமாக ஆறு, பாசன வாய்கால்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் 70 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் கோணக்கடுங்கலாறு, கண்ணனாறு உள்ளிட்ட ஆறு, பாசன வாய்க்கால்களில் இந்த உடைப்பு ஏற்பட்டது.

    தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 25 இடங்களிலும், திருவாரூர் மாவட்டத்தில் 16 இடங்களிலும், நாகை மாவட்டத்தில் 27 இடங்களிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 இடங்களிலும் உடைப்பு ஏற்பட்டது. 200 இடங்களில் ஆறு, பாசன வாய்க்கால்களின் கரைகளை தாண்டி தண்ணீர் வழிந்தோடியது. உடைப்புகள் சரி செய்யும் பணி தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது.

    இது குறித்து பொதுப்பணித்துறை கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் அன்பரசனிடம் கேட்ட போது அவர் கூறுகையில், “டெல்டா மாவட்டங்களில் 70 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதில் 65 உடைப்புகள் சீரமைக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு சில இடங்களில் தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழையால் 200 இடங்களில் ஆறு, பாசன வாய்க்கால்களின் கரைகளில் தண்ணீர் வழிந்தோடியது. இந்த பகுதிகளில் உடைப்பு ஏற்படாமல் இருக்க மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் கொண்டு சரி செய்யப்பட்டது.

    ஆகாயத்தாமரை, காட்டாமணக்கு போன்ற செடி, கொடிகளால் 98 இடங்களில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டது. அந்த பகுதிகளில் பொக்லின் எந்திரம் மூலம் செடி, கொடிகள் அகற்றப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×