search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை நீரில் மூழ்கியுள்ள பயிர்கள்
    X
    மழை நீரில் மூழ்கியுள்ள பயிர்கள்

    மத்திய குழு வருகை- புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆய்வு

    சென்னை வந்துள்ள மத்திய குழு நாளை புயல் பாதித்த மாவட்டங்களுக்கு 2 பிரிவாக சென்று பார்வையிட முடிவு செய்துள்ளனர்.
    சென்னை:

    வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த 26-ந் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

    மாமல்லபுரத்துக்கும், மரக்காணத்துக்கும் இடையே கரையை கடந்தாலும் கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் சேதத்தை உருவாக்கியது.

    இந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்துக்குள் புரெவி புயல் உருவாகி கன்னியாகுமரி-ராமேசுவரம் இடையே கரையை கடந்தது. இந்த புயல் வீசிய போதும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது.

    2 புயல்கள் அடுத்தடுத்து வந்து அதிக மழை பெய்ததால் ஏராளமான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி கிடக்கின்றன. வாழை, தென்னை மரங்கள் சரிந்தன. பல கால்நடைகள் இறந்ததோடு, வீடுகளும் சேதம் அடைந்துள்ளன.

    புயல் மழையால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கும் என்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் உறுதி அளித்தனர்.

    இதையொட்டி புயல் சேதங்களை கணக்கிட மத்திய அரசு உள்துறை இணைச்செயலாளர் அசு தோஷ் அக்னி கோத்ரி தலைமையில் குழு ஒன்றை தமிழகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இந்த குழுவினர் இன்று மதியம் சென்னை வந்தனர். இந்த குழுவில் ஐதராபாத்தில் உள்ள மத்திய வேளாண்துறையின் எண்ணை வித்துகள் வளர்ச்சி இயக்குனர் மனோகரன், மத்திய சாலை போக்குவரத்துறை மண்டல அதிகாரி ரணன்ஜெய்சிங், டெல்லியில் உள்ள மத்திய நிதித்துறை இயக்குனர்களில் ஒருவரான பர்தெண்டு குமார்சிங், மத்திய மின்சார குழுமத்தின் துணை இயக்குனர் ஓ.பி.சுமன், மத்திய ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் தர்மவீரர் ஜா, மத்திய மீன்வள மேம்பாட்டு ஆணையர் பால் பாண்டியன், சென்னையில் உள்ள மத்திய நீர் ஆணைய கண்காணிப்பு இயக்குனர் ஜெ.ஹர்ஷா ஆகிய 7 பேர் உள்ளனர்.

    மத்திய குழுவினர் சென்னை பட்டினப்பாக்கம் லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் தங்குகின்றனர். மதியம் 4 மணியளவில் தலைமை செயலகம் சென்று அதிகாரிகளை சந்திக்கின்றனர்.

    தலைமை செயலாளர் சண்முகம், பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் மத்திய குழுவினருக்கு வெள்ள சேத நிலவரங்களை விவரிக்கிறார்கள். எந்தெந்த மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதையும் எடுத்து கூறுகிறார்கள்.

    அதிகாரிகள் சொல்லும் விவரங்களை மத்திய குழுவினர் விரிவாக கேட்டு அறிந்து அதன் அடிப்படையில் நாளை புயல் பாதித்த மாவட்டங்களுக்கு 2 பிரிவாக சென்று பார்வையிட முடிவு செய்துள்ளனர்.

    ஒரு குழுவினரை மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி அழைத்து செல்கிறார். இந்த குழுவினர் நாளை தென்சென்னை பகுதிகளில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுகிறார்கள். அதன் பிறகு செங்கல்பட்டு மாவட்டத்துக்கு சென்று பல சேதங்களை பார்வையிடுகிறார்கள்.

    மதியம் புதுச்சேரி சென்று அங்கு தங்குகிறார்கள். 7-ந்தேதி காலையில் புதுச்சேரியில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுகிறார்கள்.

    மதியம் 2 மணிக்கு பிறகு கடலூர் மாவட்டம், விழுப்புரம் மாவட்டங்களுக்கு சென்று புயல் பாதித்த இடங்களை பார்வையிடுகிறார்கள். அதன் பிறகு அங்கிருந்து சென்னை திரும்புகிறார்கள்.

    இதே போல் மற்றொரு மத்திய குழுவினரை பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மணிவாசன் புயல் பாதித்த மாவட்டங்களுக்கு அழைத்து செல்கிறார்.

    இந்த குழுவினர் 6-ந்தேதி வடசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுகிறார்கள்.

    நீரில் மூழ்கிய நெற்பயிர்களையும் பார்க்கிறார்கள். அதன் பிறகு காஞ்சிபுரம் சென்று அங்கிருந்து வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு சென்று புயல் சேதங்களை பார்வையிடுகிறார்கள். 6-ந்தேதி இரவு வேலூரில் தங்கும் மத்திய குழுவினர் 7-ந்தேதி வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் புயல் சேதங்களை பார்வையிடுகிறார்கள்.

    அதன் பிறகு 7-ந்தேதி இரவு சென்னை வருகிறார்கள்.

    2 மத்திய குழுவினரும் 8-ந்தேதி காலையில் சென்னையில் தலைமை செயலகம் சென்று தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்கள்.

    அதன் பிறகு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது தமிழகத்தின் சார்பில் புயல் பாதிப்பு சேத விவரங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரிவாக பட்டியலிட்டு மத்திய குழுவிடம் அளிக்க உள்ளார்.

    அதன்பிறகு மத்திய குழுவினர் 8-ந்தேதி மாலை டெல்லி செல்கிறார்கள்.

    தமிழக அரசு கொடுக்கும் அறிக்கை மற்றும் நேரில் பார்வையிட்ட சேத விவரங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மத்திய அரசுக்கு புயல் பாதிப்பு சேதங்களை மத்திய குழுவினர் சமர்ப்பிப்பார்கள்.

    அதன் அடிப்படையில் மத்திய அரசு தமிழகத்துக்கு தேவையான நிவாரண நிதியை வழங்கும்.
    Next Story
    ×