search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சந்தோஷ் குமார்
    X
    சந்தோஷ் குமார்

    அயோத்தியாப்பட்டணம் அருகே 8-ம் வகுப்பு மாணவன் கொலை?

    அயோத்தியாப்பட்டணம் அருகே 8-ம் வகுப்பு மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டான். அவன் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அயோத்தியாப்பட்டணம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள காரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 37). இவர் தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு சந்தோஷ்குமார் (14), ஸ்ரீதர் (10) என்ற 2 மகன்கள் இருந்தனர். இவர்களில் மூத்த மகன் சந்தோஷ்குமார் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

    தற்போது ஆன்லைன் வகுப்பு நடப்பதால் வீட்டில் இருந்த சந்தோஷ்குமாரை, நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் காணவில்லை. மாணவனை பெற்றோரும், உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடினர்.

    இந்த நிலையில் நேற்று மாலை காரிப்பட்டி தெற்கு காடு பகுதியில் உள்ள பொது கழிப்பிடத்தின் பின்புற சுவரில் துப்பட்டாவில் கழுத்து இறுக்கிய நிலையில் மாணவன் சந்தோஷ்குமார் தூக்கில் பிணமாக தொங்கினான். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காரிப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காரிப்பட்டி போலீசார் மாணவனின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். அப்போது மாணவனின் உடலை எடுக்க விடாமல் உறவினர்கள், அந்த பகுதி பொதுமக்கள் தடுத்தனர். மேலும் மாணவனை கொன்ற குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பிறகு மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவன் மர்ம சாவு குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த மாணவனுக்கு ஓரின சேர்க்கையாளர்கள் யாரேனும் பாலியல் தொல்லை கொடுத்து, வெளியே தெரியக்கூடாது என்பதற்காக கொலை செய்து இருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் காரிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×