search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைதுசெய்த காட்சி.
    X
    போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைதுசெய்த காட்சி.

    பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்ட 45 பேர் கைது

    டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திண்டுக்கல்லில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 45 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திண்டுக்கல்:

    மத்திய அரசு 3 வேளாண் திருத்த சட்டங்களை கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து திண்டுக்கல்லில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் இறங்கினர். இதையொட்டி முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் அந்த கட்சியினர் திண்டுக்கல்லில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.

    மேலும் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அவர்களை, அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சினர் தரையில் அமர்ந்தும், படுத்து கொண்டும் போராட்டம் நடத்தினர். அப்போது 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் கைது செய்ய தொடங்கினர். அப்போது தரையில் படுத்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று வேனில் ஏற்றினர். இதனால் லேசாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட மொத்தம் 45 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபோல டெல்லியில் போராடும் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகளுக்கு ஆதரவாக பழனி பாரத ஸ்டேட் வங்கி சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், நகர செயலாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் அவர்கள் பாரத ஸ்டேட் வங்கி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பழனி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
    Next Story
    ×