search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    மதுரவாயல் அருகே இரும்பு குழாயால் தாயை அடித்து கொன்ற கொடூர மகன்

    மதுகுடிப்பதற்கு பணம் தராததால் ஆத்திரமடைந்து, இரும்பு குழாயால் தாயை அடித்து கொலை செய்த கொடூர மகனை போலீசார் கைது செய்தனர்.
    பூந்தமல்லி:

    மதுரவாயல் அடுத்த நெற்குன்றம் பெருமாள் கோவில் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆதியம்மாள் (வயது 65). இவருக்கு மகேஷ்குமார் (38), சதீஷ் (35) என 2 மகன்கள் உள்ளனர். வீட்டின் மாடியில் உள்ள குடிசை வீட்டில் ஆதியம்மாள் தனியாக வசித்து வந்தார்.

    கீழே உள்ள வீட்டில் மகேஷ்குமார் (38) தனியாக வசித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்து நேற்று ஆதியம்மாள் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து மாடியில் உள்ள குடிசை வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஆதியம்மாள் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கோயம்பேடு போலீசாருக்கு உடனடியாக அவர்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அதன் பின்னர், கீழே உள்ள வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அவரது மகன் மகேஷ்குமாரை பிடித்து போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் பெற்ற தாயை அடித்துக்கொலை செய்ததை கூறியதும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாரின் விசாரணையில் தெரியவந்ததாவது, ‘மகேஷ்குமார் மதுரை நீதிமன்றத்தில் உதவியாளராக வேலை செய்து வந்த நிலையில், அங்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்துவந்தார். குடிப்பழக்கம் உடைய இவர், தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தாயுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

    நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் இருந்த அவர், குடிப்பதற்கு தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், பணம் தராததால் ஆத்திரமடைந்த மகேஷ்குமார் வீட்டில் இருந்த இரும்பு குழாயை எடுத்து தாயின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து அவர், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து போனார்.

    இதையடுத்து சிறிது நேரம் அங்கேயே இருந்த மகேஷ்குமார், அதன் பின்னர் கீழே உள்ள வீட்டில் வந்து போதையில் படுத்து உறங்கியது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக மகேஷ்குமாரை கோயம்பேடு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×