search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ரத்தினபுரியில் தொழிலாளியை தாக்கி பணம் பறித்த 2 பேர் கைது

    கோவை ரத்தினபுரியில் தொழிலாளியை தாக்கி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கணபதி:

    கோவை ரத்தினபுரி சுப்பாத்தாள் வீதியை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 39). கூலித் தொழிலாளி. இவர் சொந்த வேலையாக காந்திபுரம் பகுதிக்கு சென்றுவிட்டு, 100 அடி ரோடு வழியாக ரத்தினபுரிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து 30 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென ஜெகதீசனை தாக்கி, அவரிடம் இருந்த ரூ.13 ஆயிரத்தை பறித்தனர். மேலும் அவரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். பணத்தை பறிகொடுத்த ஜெகதீசன் இதுகுறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார்.

    இந்த புகாரின் பேரில், ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜெகதீசனை தாக்கி பணத்தை பறித்து சென்றது ஆவாரம்பாளையத்தை சேர்ந்த வினோத்குமார், மற்றும் அவரது நண்பர் சிவானந்தா காலனியைச் சேர்ந்த ரகுநந்தன் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் வேறு எதுவும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×