search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அம்மா இருசக்கர வாகனம் வாங்க பெண்கள் விண்ணப்பிக்கலாம்: அடுத்த மாதம் 31-ந் தேதி கடைசிநாள்

    அம்மா இருசக்கர வாகனம் வாங்க பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் 31-ந் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் ஊரக, நகர்புற பகுதியில் வசிக்கும் பெண்கள், தாங்கள் பணிபுரியும் இடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு எளிதில் சென்று வர இரு சக்கர வாகனம் வாங்க அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் 2020-21-ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

    அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களில் பணிபுரியும் மகளிர். கடைகள் மற்றும் தொழிற் நிறுவனங்களில் பணிபுரியும் மகளிர், சுய தொழில், வியாபாரம், இதர பணிகள் மேற்கொள்ளும் மகளிர். அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு திட்டங்கள் செயல்படுத்துவோர், சமுதாயநல அமைப்பாளர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகள், கிராம வறுமை ஒழிப்பு சங்க நிர்வாகிகள், மாவட்ட மக்கள் கற்றல் மையங்களில் பணிபுரியும் மகளிர்.

    சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பெண்களில் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மிகாத அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள், சமையலர்கள், கூட்டுறவு சங்கம் மற்றும் கடைகளில் பணிபுரியும் மகளிர், பல்வேறு அரசுதுறைகளில் பணிபுரிவோர், நகர்புற உள்ளாட்சி அமைப்புகள், ஊரக உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரியும் மகளிர். மேலும் வங்கி தொடர்புடைய பணிகளில் பணியாற்றும் மகளிர் ஆகியோர்கள் மானியம் பெற தகுதியுடைய பயனாளிகள் ஆகும்.

    வயதுவரம்பு 18 முதல் 45 வயது வரையிலும், ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்குமிகாமல் இருக்கவேண்டும். கல்வித்தகுதி தேவையில்லை. இருசக்கரவாகனம் ஓட்டுனர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். மலைப்பகுதிகள், மகளிரை குடும்ப தலைவராக கொண்டவர்கள், ஆதரவற்ற விதவை, மாற்றுத்திறனாளி மகளிர், 35 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத மகளிர், கணவனால் கைவிடப்பட்டோர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மகளிர், திருநங்கை ஆகியோர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    விண்ணப்பிக்க தகுதியுடைய மகளிர், ஊரக பகுதி எனில் சம்மந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன்களிலும், நகர பஞ்சாயத்து, நகரசபை மற்றும் மாநகராட்சி பகுதிகள் எனில் சம்பந்தப்பட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் அதற்கான விண்ணப்ப படிவத்தில் வயதுசான்று, இருப்பிடச்சான்று, இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம், வருமான சான்று, பணிச்சான்று, ஆதார் கார்டு நகல், கல்விசான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முன்னுரிமைக்கான சான்று, சாதி சான்றிதழ் நகல் (தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்), மாற்றுதிறனாளி அடையாளஅட்டை நகல், இரு சக்கரவாகனத்திற்கான விலைப்புள்ளி, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் (தனிநபர்) ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கும்படி தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பங்களை அடுத்த மாதம் 31-ந் தேதிக்குள் மேற்பட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×