search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை படத்தில் காணலாம்.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை படத்தில் காணலாம்.

    சென்னை விமான நிலையத்தில் ரூ.73 லட்சம் தங்கம் பறிமுதல் - 3 பெண்கள் கைது

    துபாயில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.73 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    சென்னை:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த சிறப்புவிமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த புதுக்கோட்டையை சேர்ந்த உமா கொலசு பீவி (வயது 49), மகரீபா பீவி (51), மதுரையை சேர்ந்த குணசுந்தரி (35) ஆகிய 3 பெண்களை நிறுத்தி விசாரித்தனர்.

    அவர்களை தனியறைக்கு அழைத்து சென்று பெண் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 3 பெண்களும் அணிந்து இருந்த மேலாடைகளில் ரகசிய அறை அமைத்து, தங்கத்தை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, 3 பெண்களிடம் இருந்து ரூ.31 லட்சத்து 41 ஆயிரம் மதிப்புள்ள 604 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.

    அதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த மற்றொரு சிறப்பு விமானத்தில் பயணிகள் இறங்கி சென்ற பின், சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது விமானத்தில் ஒரு இருக்கையின் அடியில் இருந்த பொட்டலத்தில் இருந்த ரூ.41 லட்சத்து 71 ஆயிரம் மதிப்புள்ள 802 கிராம் தங்க கட்டிகளை கைப்பற்றினர். தங்க கடத்தி வந்தவர்கள் சுங்க இலாகா அதிகாரிகள் நடவடிக்கைக்கு பயந்து விட்டு சென்றார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே நாளில் ரூ.73 லட்சத்து 12 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 406 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். 3 பெண்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×