search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெயிண்டர் குத்திக்கொலை- தொழிலாளி கைது

    மகள் உறவுமுறை பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெயிண்டர், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    தேனி:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள மேலக்கோட்டையை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 53). தொழிலாளி. இவருடைய மனைவி மகேஸ்வரி (39). இவர்களுக்கு கோகிலவாணி என்ற மகளும், ஜெயசூர்யா (19) என்ற மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.

    தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தை சேர்ந்தவர் பரமசிவம் (58). இவர், நாகராஜின் அத்தை கணவர் ஆவார். பெயிண்டரான இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரமசிவம், மேலக்கோட்டைக்கு வந்து சென்றார்.

    அப்போது அவருக்கும், நாகராஜ் மனைவி மகேஸ்வரிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. பரமசிவத்துக்கு மகேஸ்வரி மகள் உறவுமுறை என்ற போதிலும், அவர்களிடையே கள்ளத்தொடர்பு தொடர்ந்து நீடித்தது. இதனால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மகேஸ்வரி தனது கணவர் மற்றும் குடும்பத்தை பிரிந்து பரமசிவத்துடன் தூத்துக்குடிக்கு சென்று விட்டார். அங்கு அவர்கள் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்தனர்.

    இந்தநிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர்கள் 2 பேரும் தேனி மிராண்டா லைன் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகராஜ், தனது மகன் ஜெயசூர்யா, தாய் காவேரியம்மாள் ஆகியோருடன் தேனிக்கு வந்தார். பின்னர் அவர் நேற்று முன்தினம் தனது மனைவியை சந்தித்து பேசி தன்னுடன் அழைத்துச் செல்ல முயன்றார்.

    அப்போது இரவில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருந்த போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில் ஆத்திரம் அடைந்த நாகராஜ், தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் பரமசிவத்தை குத்தினார். உடனே அவர் அந்த கத்தியை பிடுங்கி நாகராஜை குத்தினார். இதை தடுக்க முயன்ற மகேஸ்வரி, ஜெயசூர்யா ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது.

    இறுதியாக கத்தியை பறித்த நாகராஜ், பரமசிவத்தை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரமசிவம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தேனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த மகேஸ்வரி, ஜெயசூர்யா ஆகிய இருவரும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் நாகராஜ், ஜெயசூர்யா ஆகிய 2 பேர் மீதும் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் நாகராஜ் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×