search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    படகு
    X
    படகு

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது நாளாக 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 2-வது நாளாக 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் 2 ஆயிரம் நாட்டுப்படகுகளும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    தூத்துக்குடி:

    வங்கக்கடலில் உருவாகி உள்ள ‘நிவர்‘ புயல் காரணமாக கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும், கடல் அலைகள் சுமார் 3 மீட்டர் உயரத்துக்கு எழக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

    தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு கடலில் புயல் உருவாகி இருப்பது குறித்து எச்சரிக்கும் வகையில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

    இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக 245 விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அதேபோல் இனிகோநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை.

    ஏற்கனவே மீன்பிடிக்க சென்று தங்கி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த திரேஸ்புரம், தருவைகுளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்களுக்கும் புயல் குறித்த எச்சரிக்கை தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் கரை திரும்பி உள்ளனர்.

    இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் 5 ஆயிரம் பேர் இன்றும் மீன்பிடிக்க செல்லவில்லை.

    நெல்லை மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

    அதைத் தொடர்ந்து கூடுதாழை, கூட்டப்பனை, உவரி, இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல், கூத்தன்குழி, பஞ்சள், தோமையார்புரம் உள்பட நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மீனவர்களும் இன்று 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    இதனால் 2 ஆயிரம் நாட்டுப்படகுகளும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×