search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை படத்தில் காணலாம்.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை படத்தில் காணலாம்.

    கோவில்பட்டியில் குடோனில் பதுக்கிய 48 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்- 3 பேர் கைது

    கோவில்பட்டியில் குடோனில் பதுக்கிய 48 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் சிலர் ரேஷன் அரிசியை குடோனில் பதுக்கி வைத்து கடத்துவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், சப்-இன்ஸ்பெக்டர் குருசித்திர வடிவேல் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் ரோந்து சென்றபோது, அங்குள்ள மயானம் அருகே தனியார் குடோனில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அரிசி மூட்டைகளை இறக்கி செல்வதை கண்டுபிடித்தனர். உடனே போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு சிலர் ரேஷன் அரிசி மூட்டைகளை லாரியில் ஏற்றி, வெளியூருக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

    இதுதொடர்பாக அங்கிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கோவில்பட்டியை அடுத்த இனாம்மணியாச்சியை சேர்ந்த கருத்தப்பாண்டி மகன் பால்பாண்டியன் (வயது 33), கோவில்பட்டியை சேர்ந்த குருநாதன் மகன் மகேந்திரன் (32), அண்ணாநகரை சேர்ந்த கருப்பன் மகன் ஜெயராம் (37) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தலா 50 கிலோ எடை கொண்ட 48 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

    பின்னர் கைதானவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளையும் தூத்துக்குடி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
    Next Story
    ×