search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    அன்னூர் பகுதியில் ஒரே நாளில் 3 வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு

    அன்னூர் பகுதியில் ஒரே நாளில் 3 வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு நடைபெற்றது. அப்போது மர்ம நபர்கள், பொதுமக்களை தாக்கி விட்டு காரில் தப்பி சென்றனர்.
    அன்னூர்:

    கோவை மாவட்டம் அன்னூர் அல்லிக்காரன்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் கோவையில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் பணிக்கு சென்று இரவு வீடு திரும்புவது வழக்கம். இவரது வீட்டில் மனைவி, குழந்தைகள் ஊருக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடினர்.

    அன்னூர் குமரன்நகர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவர் சூலூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கர்ப்பமாக இருப்பதால் ஊருக்கு சென்றுவிட்டார். லோகநாதன், தினமும் சூலூருக்கு பணிக்கு சென்று இரவு வீட்டிற்கு வருவது வழக்கம். இந்த நிலையில் குமரன்நகர் பகுதியில் லோகநாதன் வீட்டிற்குள் 3 மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள், அங்கிருந்த பீரோவை உடைத்து திருட முயன்றனர். அதில் கவரிங் நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே அதை எடுக்காமல் ரூ.14 ஆயிரம் ரொக்க பணத்தை திருடினர்.

    குமரன்நகர் பகுதியை சேர்ந்தவர் கேசவன். இவர் சென்னை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் மர்ம நபர்கள் 3 பேர் புகுந்து திருட முயன்றனர். அந்த சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பாலு மற்றும் சிலர் திரண்டு வந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் தப்பி ஓட முயன்றனர்.

    அவர்களை பொதுமக்கள் விரட்டி சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள், பாலுவை இரும்புக்கம்பியால் அடிக்க முயன்றதோடு மிரட்டல் விடுத்தனர். இதனால் பயந்து போன அவர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து மர்ம நபர்கள் 3 பேரும் தங்களது கூட்டாளியுடன் காரில் தப்பி சென்று விட்டனர். இது குறித்த தகவலின் பேரில் அன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள், மர்ம நபர்கள் மற்றும் அவர்கள் தப்பி சென்ற கார் எண் உள்ளிட்ட விவரங்களை மற்ற போலீஸ் நிலையங்களுக்கு தெரிவித்த னர். இதைத்தொடர்ந்து ஒரே நாளில் அடுத்தடுத்து 3 வீடுகளில் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 3 வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு நடைபெற்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×