search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித்ஷா
    X
    அமித்ஷா

    அமித் ஷா இன்று சென்னை வருகை- பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

    மத்திய மந்திரி அமித் ஷா இன்று சென்னை வருகிறார். மாலையில் நடைபெறும் விழாவில் ரூ.62 ஆயிரம் கோடியில் பல்வேறு திட்ட பணிகளை அவர் தொடங்கி வைக்கிறார். அவரது வருகையையொட்டி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    சென்னை:

    பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா 2 நாள் பயணமாக இன்று (சனிக்கிழமை) சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து காலை 10.50 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் அவர், மதியம் 1.40 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தை வந்தடைகிறார்.

    விமான நிலையத்தில் மத்திய மந்திரி அமித் ஷாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் ஏற்பாடு செய்து உள்ளனர்.

    விமான நிலையத்தில் அவருக்கு மேளதாளத்துடன் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட இருக்கிறது. இதில், தமிழக பா.ஜ.க. மூத்த, முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். அதன்பிறகு, அங்கிருந்து காரில், மத்திய மந்திரி அமித் ஷா ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு புறப்படுகிறார். வழி நெடுக பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    14 இடங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராமிய கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, தாரைதப்பட்டை, செண்டை மேளம், சிலம்பம் மற்றும் பாரம்பரிய நடனங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் சுமார் 300 கிராமிய கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

    நாடு முழுவதும் தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், மத்திய மந்திரி அமித் ஷா வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க பா.ஜ.க.வினர் போலீசாரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். ஆனால், நேற்று இரவு வரை போலீஸ் தரப்பில் இருந்து எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. இருந்தாலும், வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனைத்து ஏற்பாடுகளையும் பா.ஜ.க.வினர் செய்துள்ளனர்.

    ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலை சென்றடையும் அமித் ஷா அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.

    பின்னர், மாலை 4.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கலைவாணர் அரங்கத்துக்கு அமித் ஷா வருகிறார். அங்கு, திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடியில் புதிய நீர்த்தேக்க திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவும், ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணி உள்பட பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது.

    இந்த விழாவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றுகிறார். தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முன்னிலை வகிக்கிறார். மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, தேர்வாய்கண்டிகை புதிய நீர்த்தேக்க திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி விழா பேருரை ஆற்றுகிறார்.

    விழா முடிந்ததும் மாலை 6.30 மணிக்கு மீண்டும் ஓட்டல் லீலா பேலசுக்கு அமித் ஷா வருகிறார். அங்கு இரவு 7 மணிக்கு தமிழக பா.ஜ.க. மாநில, மாவட்ட நிர்வாகிகளையும், பல்வேறு அணிகளின் தலைவர்களையும் அவர் சந்தித்து பேசுகிறார். இரவு 8.30 மணிக்கு பா.ஜ.க. உயர்மட்ட குழுவினருடன் அமித் ஷா ஆலோசனை நடத்துகிறார். இந்த சந்திப்பின்போது, எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட இருக்கிறது.

    இன்று இரவு ஓட்டலில் தங்கும் அவர், நாளை காலை 10 மணி அளவில் அங்கிருந்து காரில் புறப்பட்டு விமான நிலையம் செல்கிறார். காலை 10.15 மணிக்கு தனி விமானத்தில் அமித் ஷா டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு பிரமுகர்கள் பட்டியலில் இருப்பதால், உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. விமான நிலையம் முதல், விழா நடைபெறும் கலைவாணர் அரங்கம் வரையில் வழி நெடுகிலும் 10 அடி தொலைவுக்கு ஒரு போலீசார் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மொத்தம் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்படுகின்றனர்.

    சென்னை விமான நிலையம், நிகழ்ச்சி நடைபெறும் கலைவாணர் அரங்கம், அமித் ஷா தங்கும் லீலா பேலஸ் ஓட்டல் ஆகிய இடங்கள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    கலைவாணர் அரங்கத்தின் உள்ளேயும், லீலா பேலஸ் ஓட்டலுக்கு உள்ளேயும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு நேரடியாக கண்காணித்து வருகிறார். பாதுகாப்பு ஒத்திகை நேற்று நடைபெற்றது.
    Next Story
    ×