search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை திருட்டுபோன வீட்டில் துணிகள் சிதறி கிடப்பதை படத்தில் காணலாம்.
    X
    நகை திருட்டுபோன வீட்டில் துணிகள் சிதறி கிடப்பதை படத்தில் காணலாம்.

    திருப்பூர் அருகே எலெக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் வீட்டில் 14 பவுன் நகை திருட்டு

    திருப்பூர் அருகே எலெக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் வீட்டில் பூட்டை உடைத்து 14 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்றுள்ளனர்.
    அனுப்பர்பாளையம்:

    திருப்பூரை அடுத்த கணியாம்பூண்டி அருகே முருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 34). இவருடைய மனைவி திவ்யா (22). அதே பகுதியில் சதீஷ்குமார் எலெக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். கடந்த 13-ந்தேதி இரவு சதீஷ்குமார் தலை தீபாவளியை கொண்டாடுவதற்காக மனைவியுடன் குன்னத்தூர் பகுதியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றார். இதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்தார்.

    இந்த நிலையில் சதீஷ்குமாரின் வீட்டருகே வசிக்கும் அவருடைய தாயார் அங்கம்மாள் நேற்று அந்த பகுதிக்கு வந்த போது சதீஷ்குமார் வீட்டின் பின்பக்கம் கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சதீஷ்குமாருக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து குன்னத்தூரில் இருந்து வந்த சதீஷ்குமார் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டின் உள்ளே இருந்த இரும்பு பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த துணிமணிகள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 2 நெக்லஸ், 1 ஜோடி வளையல், 3 மோதிரங்கள் உள்பட 14 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்து, திருட்டு நடைபெற்ற சதீஷ்குமாரின் வீட்டை பார்வையிட்டனர். பின்னர் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார்கள்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளையும் பார்வையிட்டு, விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். திருப்பூர் அருகே தலை தீபாவளிக்காக மாமனார் வீட்டிற்கு சென்றிருந்த எலெக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் வீட்டில் 14 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×