search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கோவையில் நண்பர்களுடன் தீபாவளி கொண்டாடிய வாலிபர் வெட்டிகொலை- 2 பேர் கைது

    கோவையில் நண்பர்களுடன் தீபாவளி கொண்டாடிய வாலிபர் வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜர் வீதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன்(வயது23). இவர் அந்த பகுதிகளில் ரவுடி என கூறி பணம் பறிப்பது, அந்த வழியாக செல்பவர்களை தாக்குவது உள்பட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது பெற்றோர் மகனுடன் வீட்டை மாற்றி விட்டு துடியலூர் அடுத்த சாஸ்திரி வீதிக்கு குடி பெயர்ந்தனர்.

    இந்த நிலையில் ஜனார்த்தனன் தீபாவளி பண்டிகையை தனது பழைய நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாட முடிவு செய்தார். இதற்காக அவர் நேற்று முன்தினம் இரவு துடியலூரில் இருந்து ஆர்.எஸ்.புரம் காமராஜர் நகருக்கு வந்தார்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு நண்பர்கள் சந்தித்து கொண்டதால் அவர்கள் சிறிது நேரம் பேசினர். பின்னர் அனைவரும் சேர்ந்து பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 3 பேர் கும்பல் கத்தி, உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். இதை பார்த்த ஜனார்த்தனன் ஓட்டம் பிடித்தார்.

    ஆனால் அந்த கும்பல் விடாமல் துரத்தி சென்று பட்டத்தரசியம்மன் கோவில் பின்புறம் வைத்து ஜனார்த்தனனை சரமாரியாக வெட்டினர். பின்னர் அங்கிருந்து அந்த கும்பல் தப்பியோடியது.

    பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய ஜனார்த்தனனை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஜனார்த்தனனுக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்ததும், அதில் ஒரு வாலிபரை ஜனார்த்தனன் வெட்டி கொன்றதும் தெரியவந்தது.

    மேலும் வெட்டி கொலை செய்யப்பட்டவரின் நண்பர்கள் இவரை பழிவாங்க காத்திருந்து தீபாவளி நாளில் அவரை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த குணா, மாரி ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய ராஜேசை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×