
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கரையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். தற்போது மீன்பிடிகாலம் என்பதால் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் மூலம் ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.
அதன்படி நேற்று மதியம் தரங்கம்பாடியை சேர்ந்த மீனவர்கள் பாண்டியன் என்பவருடைய படகு மூலம் முத்துலிங்கம் (வயது 28), ராஜூ(24), ரஞ்சித் (18), முருகன் (36)ஆகிய 4 பேரும் கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
இன்று காலை கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்துக்கொண்டிருந்த 4 பேரையும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேயன் துறைமுகத்தில் உள்ள முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மேலும் 14 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நாகை மீனவர்கள் 4 மீனவர்கள் கைதான நிலையில் மேலும் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை கடற்படையினரின் இந்த தொடர் அட்டூழியத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.