
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்(வயது 53). டிராக்டர் டிரைவர். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2014-ம் ஆண்டு பாஸ்கர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் திருப்பூரில் 2 ஆண்டுகள் தங்கியிருந்த நிலையில் குழந்தையுடன் ஊர் திரும்பினர்.
இந்த நிலையில் பாஸ்கர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததாக சம்பந்தப்பட்ட சிறுமி கடந்த 2016-ம் ஆண்டு மன்னார்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து மரபணு சோதனை நடத்தப்பட்டு பாஸ்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருவாரூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட பாஸ்கருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 5 மாதம் சிறை தண்டணையும் அனுபவிக்க வேண்டும் என மகிளா நீதிமன்ற நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மல்லிகா ஆஜரானார்.