search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    ஆலுவா அருகே கள் குடித்த தொழிலாளி திடீர் பலி

    ஆலுவா அருகே கள் குடித்த தொழிலாளி திடீரென்று இறந்தார். இதையடுத்து கள்ளுக்கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
    பெரும்பாவூர்:

    எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள அசோகபுரம் பகுதியை சேர்ந்தவர் என்.கே.சிவன் (49 வயது), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை ஆலுவா அருகே உள்ள குன்னரத்தேரி பகுதியில் இருக்கும் ஒரு கள்ளுக்கடைக்கு சென்றார். பின்னர் அவர் அங்கு கள் வாங்கி குடித்தார்.

    பிறகு கடையை விட்டு வெளியே வந்த அவர் பைப் லைன் சாலையை நோக்கி நடந்து சென்றார். அப்போது அவர் திடீரென்று சாலையில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து என்.கே.சிவனை மீட்டு ஆலுவா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து ஆலுவா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கள் குடித்து என்.கே.சிவன் உயிரிழந்தை அறிந்த எர்ணாகுளம் மாவட்ட கலால்துறை அதிகாரி டி.ஏ.அசோக்குமார் தலைமையில் துணை ஆணையர் டீ.எஸ். சசிகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலுவாவில் உள்ள அந்த கள்ளுக்கடைக்கு வந்தனர்.

    பின்னர் அவர்கள் அங்கு இருக்கும் கள் மாதிரிகளை சேகரித்ததுடன் அவற்றை ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் அதிகாரிகள் அந்த கள்ளுக்கடையை பூட்டி சீல் வைத்தனர். ஆய்வு அறிக்கை கிடைத்த பின்னர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த கடையில் கலப்படம் நிறைந்த கள் விற்பனை செய்யப்படுவதாக, பலமுறை கலால்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் செய்தனர். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும், தற்போது கலப்படம் நிறைந்த கள்ளை குடித்து ஒருவர் இறந்த பின்னர்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர் எனவும், இனிமேல் இதுபோன்று உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பு கலப்படம் நிறைந்த கள் விற்கும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×