என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
7 பேரை உடனே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் -ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
Byமாலை மலர்5 Nov 2020 8:21 AM GMT (Updated: 5 Nov 2020 8:21 AM GMT)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என ஆளுநருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:
தமிழக எதிர்க்கட்சி தலைவரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு- சுமார் 30 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் நளினி, வி.ஸ்ரீகரன் என்ற முருகன், சாந்தன், ஏ.ஜி. பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதை தாங்கள் அறிவீர்கள்.
ஆனால், அவர்களை விடுவிக்க அ.தி.மு.க, அரசு பரிந்துரைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர் அழுத்தத்தின் விளைவாகவும், ஏழு பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று 9.9.2018 அன்று அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, தங்களுக்கு மாநில அரசு அனுப்பி வைத்தது. மாநில அரசுக்கு அதிகாரம் உள்ள சட்டங்களின் கீழான குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யவோ- அந்த தண்டனையை நிறுத்தி வைக்கவோ- அல்லது குறைக்கவோ, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின் படி, மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
ஆனால், ஏழு பேரை விடுதலை செய்யக் கோரும் மாநில அரசின் இந்த முக்கியப் பரிந்துரையானது, தங்களால் எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது- அந்த ஏழு பேருக்கும், ஆற்றொணாத் துயரத்தையும், ஈடுசெய்ய முடியாத துன்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
அரசியல் சட்ட பதவிகளில் இருப்போர் உரிய காலவரம்பிற்குள், தங்களது கடமையை ஆற்றிட வேண்டும் என்பது சட்டத்தில் வழக்கமான நடைமுறை. அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி அதிகாரம் பெற்றவர்கள் முடிவு எடுப்பதில் தேவையற்ற கால தாமதங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும்- அப்படித் தவிர்க்கவில்லையென்றால் அந்த பதவியில் இருப்போருக்கு உச்ச நீதிமன்றமே வழிகாட்டுதல்களை வழங்கலாம் என்றும் பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
மாநில அரசின் பரிந்துரையை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முடிவு எடுக்காமல்- தங்கள் அலுவலகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது – சட்டத்தின் அடிப்படையில் மாநிலத்தில் ஆட்சி நடைபெறவில்லையோ என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
ஆகவே அந்த தோற்றத்தை நீக்கிட, தமிழக அமைச்சரவையின் 9.9.2018–ஆம் தேதியிட்ட பரிந்துரையைப் பரிவுடன் ஏற்று – நளினி, வி.ஸ்ரீகரன் என்ற முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி. ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனையைக் குறைத்து - உடனடியாக அவர்களை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X