search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கள்ளக்காதல் ஜோடி தற்கொலை- போலீஸ் விசாரணை

    சுற்றுலா தலமான ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி பகுதியில் கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து ஏலகிரிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட பூங்குளம், பல்நத்தம் ஏரி வட்டம் பகுதியை சேர்ந்தவர் சென்றாயன். இவரது மனைவி ரீட்டா என்கிற மீனாட்சி (வயது 30). இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (41). இவருக்கும் ரீட்டாவுக்கும் கடந்த இரண்டு வருடங்களாக பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இவர்களுடைய கள்ளக்காதல் இரண்டு பேரின் குடும்பத்தினருக்கும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கள்ளக்காதலை கைவிடுமாறு உறவினர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். அதைபொருட்படுத்தாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    தங்களுடைய கள்ளக்காதலுக்கு இரண்டு குடும்பங்களை சேர்ந்தவர்களும் இடையூறாக இருந்ததால் சக்திவேல் மற்றும் ரீட்டா ஆகிய இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமாகிவிட்டனர். அவர்களை சென்னை, பெங்களூரு போன்ற பகுதிகளில் உறவினர்கள் தேடிபார்த்தனர். எங்கும் கிடைக்காததால் இதுகுறித்து ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் இருவீட்டாரும் தனித்தனியாக புகார் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி பகுதியில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் மரத்தில் தூக்கில் பிணமாக தொங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் தூக்கில் பிணமாக தொங்கியது காணாமல்போன கள்ளக்காதல் ஜோடி சக்திவேல், ரீட்டா ஆகியோர் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து இருவரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கொலைசெய்து தூக்கில் தொங்கவிடப்பட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.
    Next Story
    ×