search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அரூர் அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை முயற்சி

    அரூர் அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு தாயும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    அரூர்:

    தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே அச்சல்வாடி பிள்ளைகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ். விவசாயி. இவருடைய மகள் செல்வி (வயது 30). இவருக்கும் எச்.புதுப்பட்டியை சேர்ந்த வாஞ்சிநாதன் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நிஷிதா (5) என்ற மகளும், 5 மாதத்தில் சென்னகேசவன் என்ற ஆண் குழந்தையும் இருந்தது.

    வாஞ்சிநாதன் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதனால் செல்வி தனது 2 குழந்தைகளுடன் பிள்ளைகொட்டாயில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையே செல்வி கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று தெரிகிறது.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த செல்வி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். ஆனால் தான் இறந்து விட்டால் தனது குழந்தைகளை யார் கவனிப்பார்கள்? என்று கவலைப்பட்ட அவர் குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி நேற்று அப்பகுதியில் தங்களுக்கு சொந்தமான விவசாய கிணற்றுக்கு குழந்தைகளுடன் சென்றார். அந்த கிணற்றில் 40 அடி அளவுக்கு தண்ணீர் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து குழந்தைகளை கிணற்றில் வீசி விட்டு செல்வியும் கிணற்றில் குதித்தார்.

    இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கிணற்று பகுதிக்கு ஓடி வந்தனர். பின்னர் கிணற்றில் தத்தளித்து கொண்டிருந்த செல்வியை அவர்கள் மீட்டனர். ஆனால் அதற்குள் குழந்தைகள் நிஷிதாவும், சென்னகேசவனும் தண்ணீரில் மூழ்கினர். பொதுமக்களால் அவர்களை மீட்க முடியவில்லை.

    இதுகுறித்து பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடினர். ஆனால் அவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து கிணற்றில் இருந்த தண்ணீர் முழுவதும் மின் மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றப்பட்டது. அதன்பின்னர் சிறுமி நிஷிதா மற்றும் சென்னகேசவன் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதைத்தொடர்ந்து 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த 2 குழந்தைகள் கொலை மற்றும் தாய் தற்கொலை முயற்சி சம்பவம் குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×