search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராயபுரத்தில் பிளாஸ்டிக் பேக்குகள் குடோனில் தீப்பிடித்து எரிந்ததால் கரும்புகை மூட்டம் எழுந்தபோது எடுத்த படம்.
    X
    ராயபுரத்தில் பிளாஸ்டிக் பேக்குகள் குடோனில் தீப்பிடித்து எரிந்ததால் கரும்புகை மூட்டம் எழுந்தபோது எடுத்த படம்.

    ராயபுரத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

    ராயபுரத்தில் பிளாஸ்டிக் பேக்குகள் வைக்கும் குடோன் தீயில் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
    திருவொற்றியூர்:

    சென்னை ராயபுரம் லோட்டஸ் ராமசாமி தெருவில் மும்பையில் புதிதாக தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆன பள்ளிக்கூடம் மற்றும் டிராவல் பேக்குகள் (பைகள்) வைக்கும் குடோன் உள்ளது. இங்கு இருந்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய அனுப்பப்படுகிறது. இதன் உரிமையாளர் குசாத் ஜெயின், மும்பையில் உள்ளார். இந்த குடோனின் மேலாளராக குல்சித் சர்மா வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று குடோனில் 2 பெண்கள் உள்பட 6 பேர் வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர். மதியம் 1.30 மணி அளவில் குடோனில் தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஊழியர்கள், அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

    பின்னர் தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக விரைந்து வந்த போலீசார் முதல் கட்டமாக அந்த குடோனை சுற்றியிருந்த 15-க்கும் மேற்பட்ட குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதற்கிடையில் குடோன் முழுவதும் தீ பரவியதால் அங்கிருந்த பிளாஸ்டிக் பேக்குகள் தீப்பிடித்து எரிந்தது. இதனால் வானத்தை நோக்கி கரும்புகை மூட்டம் எழுந்தது. அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமானது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    ராயபுரம், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, துறைமுகம், எஸ்பிளேனேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 9 தீயணைப்பு வாகனங்கள், 5 தண்ணீர் லாரிகளில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி ராஜேஷ் கண்ணா தலைமையில் வந்த 50 தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடினர்.

    தீ கட்டுங்கடங்காமல் எரிந்ததால் 2 ஜே.சி.பி. எந்திரங்களை கொண்டு குடோனின் சுற்றுச்சுவரை இடித்து சுமார் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    எனினும் தீ விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாயின.

    சம்பவ இடத்துக்கு வடசென்னை போலீஸ் இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், திருவொற்றியூர் உதவி கமிஷனர் ஆனந்த குமார் உள்ளிட்ட அதிகாரிகள் வந்தனர்.

    தீ விபத்து குறித்து ராயபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
    Next Story
    ×