search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக தலைவர் முக ஸ்டாலின்
    X
    திமுக தலைவர் முக ஸ்டாலின்

    அதிமுக அரசு மீது திமுக வைத்த குற்றச்சாட்டுகள் உண்மையாகி இருக்கிறது- மு.க.ஸ்டாலின் அறிக்கை

    சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகையில் அதிமுக அரசு மீது திமுக வைத்த குற்றச்சாட்டுகள் உண்மையாகி இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்ட தி.மு.க. மருத்துவரணி துணை அமைப்பாளர் டாக்டர் சிவராம பெருமாள், டி.எஸ்.பி. ஒருவரின் டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்டிருப்பதும், சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் இரட்டைக் கொலை வழக்கினை விசாரித்த சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் கூறியுள்ள தகவல்களும் பேரதிர்ச்சியளிக்கின்றன.

    சிவராம பெருமாள் கொரோனா காலத்தில் மக்களுக்கு மருத்துவப் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு மருத்துவர். அவரை அம்மாவட்டத்தில் உள்ள டி.எஸ்.பி. பாஸ்கர் விசாரணை என்ற பெயரில் அழைத்து மிரட்டி அவரது கண்ணெதிரிலேயே அவருடைய மனைவியைத் தரக்குறைவாக அவதூறாகப் பேசியதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

    சாத்தான்குளம் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ., ‘கொலையுண்ட இருவர் உடல்களிலும் 18 இடங்களில் காயங்கள் இருந்தன. பென்னிக்சை அரைநிர்வாணமாக்கி, குனிய வைத்து பின்பகுதியில் தாக்கியுள்ளனர். தந்தை-மகன் இருவர் மீதும் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர்’ என்று இதயத்தை கலங்கடிக்கும் தகவல்களை கூறியிருக்கிறது. அவ்வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள அக்காவல்நிலைய ஏட்டு ரேவதி, ‘போலீசார் காலில் விழுந்து தந்தையும், மகனும் கெஞ்சினார்கள். ஆனாலும் கடுமையாக ரத்தம் சொட்டச் சொட்டத் தாக்கினார்கள்’ என்று கூறியிருக்கும் தகவல் கண்கலங்க வைக்கிறது.

    ஆனால் இந்த கொடூர கொலை நடந்தவுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? ‘சிறையில் இருந்த பென்னிக்சுக்கு மூச்சுத்திணறலும், ஜெயராஜூக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டு, இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் அங்கு உயிரிழந்தார்கள்’ என்று பச்சைப் பொய்யைச் சிறிதும் கூசாமல் அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டார். அதுமட்டுமின்றி சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மூலமும் மறைக்க வைத்தார். 1.7.2020 அன்று சட்டத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், ‘இருவரும் (ஜெயராஜ், பென்னிக்ஸ்) உடல்நிலை சரியில்லாமல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்’ என்று முழுப் பூசணிக்காயை, மனசாட்சியின்றி இலைச் சேற்றில் மறைத்தார்.

    சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்த இரட்டை கொலையை ஒரு முதல்- அமைச்சரும், சட்ட அமைச்சரும் போட்டி போட்டுக் கொண்டு மறைத்ததன் விளைவு, இன்று தமிழக காவல்துறையில் ‘கருப்பு ஆடுகளின்’ கையோங்கி நேர்மையான போலீஸ் அதிகாரிகளுக்கும், சட்டத்திற்கு உட்பட்டுச் செயல்படும் போலீசாருக்கும் மரியாதை குறைந்தது என்ற நிலை உருவாக்கப்பட்டு விட்டது.

    தி.மு.க.வுக்கு தொடக்கத்தில் இருந்தே முதல்-அமைச்சர் நடத்தும் விசாரணையில் நம்பிக்கையில்லை. அதனால்தான் சி.பி.ஐ. விசாரணை கோரி வந்தேன். இவ்வழக்கில் முதலில் மறைக்கப்பட்ட உண்மைகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் சட்டத்தின் பக்கம் உறுதியாக நின்று ஆற்றிய ஆற்றல் மிகுந்த பணிகளின் காரணமாக, இப்போது வெளிவந்திருக்கின்றன.

    சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் அ.தி.மு.க. அரசின் மீது தி.மு.க. வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை என்பது இப்போது ஆதாரபூர்வமாக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை வடிவமாகவே வெளிவந்து விட்டது. இப்போதாவது தி.மு.க. நியாயத்தின் பக்கம் நின்று போராடுகிறது. ‘அரசியலுக்காக’ மட்டும் அல்ல என்பதை முதல்-அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.

    அமைச்சர்கள் பரிந்துரையில் டிரான்ஸ்பர், துறை சார்ந்த நடவடிக்கைக்கு ஆளாகி இருப்பவர்களுக்கு முக்கிய பதவிகள் , நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போலீஸ் அதிகாரிகளைக் கூட முக்கியப் பதவியில் அமர்த்துவது, மனித உரிமை மீறல்களைச் செய்யும் போலீசாருக்கு மகுடம் சூட்டுவது, பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்தாலும் பதவி என்று எடப்பாடி பழனிசாமி செய்யும் பலவித படுபாதகச் செயல்கள் தமிழகக் காவல்துறைக்கு மிகப்பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி வருகிறது.

    கொலைகளை மறைத்ததற்காகவும் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் உள்ள ஒரு சில போலீசாரைக் காப்பாற்ற ஒட்டுமொத்த தமிழக காவல்துறையின் நன்மதிப்பையே கெடுத்ததற்காகவும், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்பாரா?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×