search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமான நிலையம்
    X
    சென்னை விமான நிலையம்

    அறியாப் பருவத்தில் ஆழமான காதல்... திரிபுராவில் இருந்து சென்னைக்கு ரகசியமாக டூர் வந்த இளம் ஜோடி

    திரிபுராவில் இருந்து ரகசியமாக சென்னைக்கு டூர் வந்த இளம் காதல் ஜோடி விமான நிலையத்தில் செய்வதறியாது திகைத்து நின்றபோது போலீசார் அவர்களை பிடித்தனர்.
    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் கடந்த திங்கட்கிழமையன்று 17 வயது நிரம்பிய சிறுவனும், 14 வயது நிரம்பிய சிறுமியும் நீண்ட நேரமாக அங்குமிங்கும் திரிந்தபடி இருந்தனர். அவர்கள் பதற்றத்தில் இருப்பதை நோட்டமிட்ட விமான நிலைய போலீசார், இதுபற்றி சைல்டுலைன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து விமான நிலையத்தில் பதற்றத்துடன் பரிதவித்த இளம் ஜோடியை பிடித்து விசாரித்தனர். 

    முதலில் முன்னுக்குப் பின் முரணாக பேசிய அவர்கள், பின்னர் இருவரும் காதலர்கள் என்றும், திரிபுராவில் இருந்து சென்னையை சுற்றிப் பார்க்க ரகசியமாக விமானத்தில் வந்ததாகவும் தெரிவித்தனர்.

    அவர்கள் இருவரும் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அகர்தலாவில் இருந்து விமானத்தில் கொல்கத்தா வந்து, அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்துள்ளனர். சென்னையில் அந்த சிறுவனின் நண்பன் வரவேற்க வருவதாக கூறியிருக்கிறான். ஆனால் கடைசி நேரத்தில் அவன் வராததால் ஏமாற்றத்துடன் காதலர்கள் இருவரும் விமான நிலையத்திலேயே சுற்றி உள்ளனர். 

    அவர்களின் பெயர், பெற்றோரின் செல்போன் எண்கள், ஆதார் கார்டு விவரங்களை பெற்ற அதிகாரிகள், அவற்றை திரிபுராவில் உள்ள சைல்டுலைன் அதிகாரிகளுக்கு அனுப்பி விவரங்களை சரிபார்த்தனர். சிறுவனும், சிறுமியும் காணாமல் போனதை உறுதி செய்தனர். பெற்றோரை தொடர்பு கொண்டும் பேசினர். 

    இதனையடுத்து திரிபுராவில் இருந்து சிறுமியின் உறவினர் ஒருவர் மற்றும் அதிகாரிகள் சென்னை வந்தனர். உரிய நடைமுறைகளுக்கு பிறகு சிறுவனும், சிறுமியும் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு உரிய அறிவுரைகள் கூறி அனுப்பி வைக்கப்படுகின்றனர். 

    விமான நிலையத்தில் பரிதவித்த அறியாப் பருவ காதல் ஜோடியின் நடமாட்டத்தை கண்டறிந்து உரிய நேரத்தில் அவர்களை மீட்ட போலீசாருக்கு பெற்றோர் நன்றி தெரிவித்தனர். 
    Next Story
    ×