
நாகை மாவட்டத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மத்திய உணவு மற்றும் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் யாதேந்திரஜெயின் தலைமையிலான மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அங்கு சாட்டியக்குடியில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் குழுவினர், நெல்மூட்டைகளில் ஊசி கரண்டி மூலம் துளையிட்டு நெல்லை பரிசோதனைக்காக எடுத்தனர்.
அந்த நெல்லை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து அந்த நெல் எந்த பகுதியில் விளைந்தது? யாருடைய நிலத்தில் விளைந்தது? இந்த நெல் எந்த ரகத்தை சேர்ந்தது? போன்ற விவரங்களை குறிப்பெடுத்து எழுதி வைத்துக்கொண்டனர்.
பின்னர் அதிகாரிகள் குழுவினர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்போது மழைக்காலம் என்பதால் விவசாயிகள் 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அரசு 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டும் கொள்முதல் செய்கிறது. 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யலாமா? என்பது குறித்து ஆய்வு செய்ய கொள்முதல் செய்த நெல்லை எடுத்து செல்கிறோம். ஆய்வகத்தில் இந்த நெல் மாதிரிகளை ஆய்வு செய்த பின்னர் அதன் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.