search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கதிரவன்
    X
    கதிரவன்

    செஞ்சி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலி

    செஞ்சி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி. இவரது மகன் கதிரவன்(14).
    மாசிலாமணி தனது மனைவியுடன் சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, கூலி வேலை செய்து வருகிறார். கதிரவன் நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் உள்ள தனது தாத்தா சவுரிமுத்து வீட்டில் தங்கியிருந்து, அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

    கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளதால், கதிரவன் அதே தெருவை சேர்ந்த சிறுவர்களுடன் நேற்று காலை ராஜி என்பவரது வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்தான்.

    அந்த சமயத்தில் ராஜி வீட்டில் மேற்கூரை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென வீட்டின் சுவர் இடிந்து தெருவில் விளையாடிக் கொண்டிருந்த கதிரவன் மீது விழுந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தான்.

    இதையறிந்த சவுரிமுத்து குடும்பத்தினர் ஓடி வந்து ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்த கதிரவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் பெய்த மழை காரணமாக ஈரப்பதத்துடன் இருந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், மாணவன் இறந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீசார் விரைந்து வந்து, கதிரவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×