search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மனைவியிடம் 22 பவுன் சங்கிலி பறிப்பு - முகமூடி அணிந்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

    பட்டுக்கோட்டை அருகே வீடு புகுந்த முகமூடி அணிந்த நபர்கள், அரிவாளை காட்டி மிரட்டி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மனைவியிடம் 22 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர்.
    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி(வயது 70). ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவரது மனைவி சீதாலெட்சுமி(65). நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் கணவன்-மனைவி இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது அந்த பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது.

    அந்த நேரத்தில் முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள், திடீரென பயங்கர ஆயுதங்களுடன் பழனிசாமி வீட்டிற்குள் புகுந்தனர். திடீரென தங்கள் வீட்டில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள், ஆயுதங்களுடன் புகுந்ததை கண்ட பழனிசாமி-சீதாலெட்சுமி தம்பதியினர் திகைத்து நின்றனர். உடனே மர்ம நபர்கள், பழனிசாமி கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்தனர்.

    பின்னர் அவர்கள் சீதாலெட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 22 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பழனிசாமி, பட்டுக்கோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டின் முன்பக்கம் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    மேலும் சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. தஞ்சையில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். மர்ம நபர்களிடம் பறிகொடுத்த சங்கிலியின் மதிப்பு ரூ.7 லட்சம் என கூறப்படுகிறது.

    இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் சங்கிலியை பறித்துச்சென்ற மூகமூடி அணிந்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அரிவாள் முனையில் சங்கிலியை பறித்துச்சென்ற சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×