search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தேனி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் உள்பட 4 பேர் தற்கொலை

    தேனி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    தேனி:

    தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கோகிலா (வயது 27). இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டார். இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோகிலா, தேனி பழனி செட்டிப்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (30) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். கணவருடன் வசித்து வந்த அவர், சில நாட்களுக்கு முன்பு பொம்மிநாயக்கன்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து தேவாரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் கம்பம் அருகே நாராயணதேவன்பட்டியை சேர்ந்தவர் கதிரேசன் (32). இவரது மனைவி சரண்யா (28). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சரண்யா கோபித்துக்கொண்டு கோம்பையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார். இதற்கிடையே நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது சரண்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேவதானப்பட்டி மேட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் மணி (52). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது மணி விஷத்தை குடித்தார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணி இறந்தார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    போடி அருகே மேலசொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் (43). இவர் டெய்லராக வேலை செய்து வந்தார். இவருக்கு சின்னத்தாய் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட வேல்முருகன், நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×