search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    வானூர் அருகே அடுத்தடுத்த 3 கடைகளில் பணம் திருட்டு

    வானூர் அருகே அடுத்தடுத்த 3 கடைகளில் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    விழுப்புரம்:

    வானூர் தாலுகா ஆரோபுட் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 60). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை கடைக்கு வந்து பார்த்தபோது முன்பக்க ஷட்டர் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு திடுக்கிட்ட அவர், கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதேபோல் இவருடைய கடைக்கு பக்கத்து கடையான ராமராஜன் என்பவருடைய ‘பாஸ்ட்புட்’ கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த ரூ.2 ஆயிரத்தையும், அதன் அருகில் இருந்த வெங்கடேசன் என்பவருடைய மாட்டுத்தீவன கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த ரூ.2 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து கடையின் உரிமையாளர்கள் ராமச்சந்திரன், ராமராஜன், வெங்கடேசன் ஆகியோர் தனித்தனியாக வானூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அடுத்தடுத்த 3 கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டுப்போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×