search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சங்கராபுரம் கடையில் 4 பவுன் நகை திருட்டு - 2 பெண்களுக்கு போலீஸ் வலைவீச்சு

    சங்கராபுரம் நகைக்கடையில் 4 பவுன் நகைகளை திருடிய 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் சன்னதி தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் பாலாஜி (வயது 24). இவர் அப்பகுதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடை தொடங்கப்பட்டு 3 மாதங்கள் தான் ஆகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த 2 பெண்கள், 2 பவுன் சங்கிலி மற்றும் தோடு வேண்டும் என கேட்டுள்ளனர். கடையில் இருந்த நகைகளை ஊழியர்கள் எடுத்து அந்த பெண்களிடம் காட்டினர்.

    அதை வாங்கி பார்த்த பெண்கள், இந்த நகையின் மாடல் எங்களுக்கு பிடிக்கவில்லை. வேறு ஏதாவது மாடல் இருந்தால் காட்டுங்கள் என்று கூறினர். இதையடுத்து பாலாஜி வேறு கடையில் இருந்து நகையை வாங்கி வந்து, அந்த பெண்களிடம் காட்டினார். அதை வாங்கி பார்த்த அந்த பெண்கள், தற்போது எங்கள் கையில் பணம் குறைவாக உள்ளது. எனவே வீட்டுக்கு சென்று பணத்தை எடுத்து வந்து நகையை வாங்கி கொள்கிறோம் என கூறிவிட்டு சென்றனர்.

    இந்த நிலையில் கடையில் உள்ள நகைகளை ஊழியர்கள் சரிபார்த்தனர். அப்போது 4 பவுன் நகை காணாமல் போனது பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பாலாஜி சங்கராபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சவுக்கத் அலி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், கடையில் நகை வாங்குவது போல் நடித்து 4 பவுன் நகைகளை அந்த 2 பெண்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×