search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப்பெரியாறு அணை
    X
    முல்லைப்பெரியாறு அணை

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது.
    கூடலூர்:

    தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைத்து கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

    அதன்படி கடந்த ஆகஸ்டு மாதத்தில் அணையின் நீர்மட்டம் 137 அடி வரை எட்டியது. அப்போது, கேரள மாநிலத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதன்பிறகு மழைப்பொழிவு குறைந்தது. அதேநேரத்தில், அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது.

    இந்தநிலையில் கடந்த சில தினங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி வரை உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 127.25 அடியாக இருந்தது நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 406 கனஅடியாக இருந்தது.

    தொடர்மழை எதிரொலியாக, நேற்று காலையில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 157 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 128.35 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் ஒரு அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,400 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
    Next Story
    ×