search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்யபிரத சாகு
    X
    சத்யபிரத சாகு

    நவம்பர் 3-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

    வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக நவம்பர் 3-ந் தேதி அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளார்.
    சென்னை:

    வரும் ஜனவரி 1-ந் தேதியை வாக்காளராக தகுதியடையும் நாளாக (18 வயது முடிப்பவர்கள்) கணக்கிட்டு, வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணியை மேற்கொள்ள, மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த பணியை மேற்கொள்வதற்காக, அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதில் வாக்காளர்கள், தங்கள் பெயர் விவரங்களை சரிபார்க்க வேண்டும்.

    பெயர் சேர்ப்பது, ஆட்சேபனை தெரிவிப்பது போன்றவற்றுக்கு நவம்பர் 16-ந் தேதியில் இருந்து டிசம்பர் 15-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும்.

    அந்த விண்ணப்பங்கள் அனைத்தும் வரும் ஜனவரி 5-ந் தேதி இறுதி செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வரும் ஜனவரி 20-ந் தேதி வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இறங்கியுள்ளார். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான பணிகளை மேற்கொள்வது குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (மாவட்ட கலெக்டர்கள்) அவர் கடந்த செப்டம்பர் 3-ந் தேதி ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்த நிலையில் நேற்று சத்யபிரத சாகு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு தொடர்பான சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் குறித்து நவம்பர் 3-ந் தேதி, தலைமைச்செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் பதிவு செய்யப்பட்டிருப்பது, இறந்தவர் பெயர் நீக்காமல் இருப்பது உள்பட சில குற்றச்சாட்டுகளை தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஏற்கனவே கூறி வருகின்றன. நவம்பர் 3-ந் தேதி நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் இதுபற்றி ஆலோசிக்கப்படும்.
    Next Story
    ×