search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நாகர்கோவிலில் அரசு பள்ளி ஆசிரியையிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு

    நாகர்கோவிலில் அரசு பள்ளி ஆசிரியையிடம் 8 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    திங்கள்சந்தை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் ஊரடி தெருவை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி வேலம்மாள் (வயது 46). இவர், அங்குள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் அஜித்குமாருக்கு தோள்பட்டையில் வலி ஏற்பட்டுள்ளது. அதற்காக நாகர்கோவில் சுங்கான்கடை பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலம்மாள் ஆஸ்பத்திரிக்கு அருகில் உள்ள கேன்டீனில் சாப்பாடு வாங்கி விட்டு, வெளியே நின்று செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் வந்தனர். மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து இருந்தவர் வேலம்மாள் கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்று விட்டார்.

    இதுபற்றி வேலம்மாள் இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×