search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக தொண்டர்கள்
    X
    அதிமுக தொண்டர்கள்

    இறுதிக்கட்ட பரபரப்பு... அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் தொண்டர்கள்

    அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து கட்சி தலைமையகத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
    சென்னை:

    வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார்? என்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக அக்கட்சி தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. செயற்குழு கூட்டத்திற்கு பிறகு பேட்டி அளித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி அக்டோபர் 7ம் தேதி (இன்று) முதல்வர் வேட்பாளர் அறிவிக்கபடுவார் என்று கூறினார்.

    அதன்பின்னர் இந்த விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. கடந்த சில தினங்களாகவே  முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தங்களின் ஆதரவு நிர்வாகிகள், மூத்த அமைச்சர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.

    குறிப்பாக நேற்று காலை முதல் அதிகாலை வரை மூத்த அமைச்சர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் இருவரையும்  மாறி மாறி சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினர். இதனால், ஆளும் அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு நிலவியது. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது இன்று காலை அறிவிக்கப்பட உள்ளது. கட்சியை வழிநடத்தும் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவையும் அறிவிக்கலாம் என்பதால், அதிமுக தொண்டர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

    சென்னையில் உள்ள தங்களது இல்லங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியே இறுதிக்கட்டமாக ஆலோசித்த பின்னர் இருவரும் கட்சி அலுவலகத்திற்கு புறப்பட்டனர். இதேபோல் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் கட்சி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தனர். ஏராளமான தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் திரண்டுள்ளனர். முதல்வர் வேட்பாளர் யார்? என்ற அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    காலை 10 மணியளவில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ பன்னீர் செல்வம் இந்த அறிவிப்பை வெளியிட உள்ளார். முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

    அதேபோல், 2017ல் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைந்தபோது ஏற்றுக்கொண்டபடி 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவையும் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



    Next Story
    ×