search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மதுரை மாநகராட்சி ஊழியர் கைது

    ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மதுரை மாநகராட்சி பில் கலெக்டர் கைது செய்யப்பட்டார்.
    மதுரை:

    மதுரை அண்ணாநகர் நேதாஜி தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார், டிராவல்ஸ் உரிமையாளர். இவர் அந்த பகுதியில் உள்ள பழைய வீடு ஒன்றை தனது மனைவி பெயரில் விலைக்கு வாங்கினார். எனவே அந்த வீட்டின் சொத்து வரி மற்றும் குடிநீர் குழாய் வரியை பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்தார். இதற்காக வடக்கு மண்டலத்தில் பணிபுரியும் தங்கள் பகுதிக்கு உரிய பில் கலெக்டர் கிருஷ்ணனை (வயது 45) அணுகினார்.

    அப்போது அவர் பெயர் மாற்றம் செய்ய 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். அவர்கள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை செந்தில்குமாரிடம் கொடுத்து அனுப்பினார்கள்.

    மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ஆலோசனையின் படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுப்பதற்காக பில் கலெக்டர் கிருஷ்ணனை நேற்று மாலை மாவட்ட கோர்ட்டு எதிரே உள்ள டீ கடைக்கு வருமாறு அவர் அழைத்தார். அங்கு வைத்து அவரிடம் செந்தில்குமார் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியசீலன் தலைமையிலான போலீசார், பில் கலெக்டர் கிருஷ்ணனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
    Next Story
    ×