search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பழைய நகைகளை விற்பனை செய்வதாக கூறி நகைக்கடை ஊழியரை கடத்தி சென்ற 5 பேர் கும்பல் கைது

    பழைய நகைகளை விற்பனை செய்வதாக கூறி நகைக்கடை ஊழியரை கடத்தி சென்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 32). இவர் மேச்சேரியில் உள்ள ஒரு தங்க நகைக்கடையில் நகை மதிப்பீட்டாளராக பணி புரிந்து வருகிறார்.

    இவரை காவேரிப்பாலம் பகுதியைச் சேர்ந்த ராமு என்பவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தன்னிடம் 25 பவுன் பழைய தங்க நகைகள் இருப்பதாகவும், கொளத்தூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தால் தருவதாகவும் அவரிடம் கூறினார். இதை நம்பி குணசேகரன் உள்பட 3 பேர் 10 லட்சம் பணத்துடன் கொளத்தூர் சென்றனர். அங்கிருந்து தொலைபேசியில் ராமுவை தொடர்பு கொண்டனர்.

    அப்போது ராமுவின் ஆட்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து குணசேகரனை ராமு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அப்போது குணசேகரன் ரூ. 13 ஆயிரம் தன்னிடம் வைத்திருந்தார். அவர்கள் கருங்கல்லூர் அருகே ஒட்டன்கரடு பகுதியில் உள்ள ராமு வீட்டிற்கு சென்றனர். அங்கு வைத்து குணகேரன் தாக்கி அவரிடம் இருந்த 13 ஆயிரம் பணத்தையும், எடை போடும் எந்திரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு குணசேகரனை வேறு இடத்திற்கு கடத்திச் சென்றனர்.

    மேலும் ரூ 50 ஆயிரம் தந்தால் மட்டுமே அவரை விடுவிப்போம் என்று அந்த கும்பல் குணசேகருடன் வந்தவர்களிடம் கூறினர்.

    பின்னர் அந்த கும்பல் கொளத்தூர் பேருந்து நிலையத்தில் குணசேகரனை விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இது குறித்து குணசேகரன் மேச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவம் நடந்த பகுதி கொளத்தூர் காவல் நிலைய கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் கொளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் குணசேகரன் கடையில் வேலை செய்யும் பார்த்திபன் (25) என்பவர் அவரிடம் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது கூட்டாளிகள் பிரதீப், கபிலன், நாட்டாமங்கலம் ரஞ்சித்குமார், கோம்பூரான் காடு ராமச்சந்திரன், காவேரி பாலம் விஜய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ராமு மட்டும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கொரோனா பரிசோதனை செய்த பின்னர் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×