search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்

    சின்னசேலம் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தொட்டியம் கிராமம் பஸ்நிலையம் அருகே டாஸ்மாக் கடை கடந்த 5 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அந்த டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்றக்கோரி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இதையடுத்து அந்த டாஸ்மாக் கடை தொட்டியம் கிராமத்தில் பங்காரம் செல்லும் சாலையில் உள்ள ஒரு இடத்திற்கு மாற்றுவதற்கு டாஸ்மாக்கடை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இதையறிந்த அந்த பகுதி பொதுமக்கள் டாஸ்மாக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் உள்ள சின்னசேலம்- கச்சிராயப்பாளையம் சாலையில் திரண்டனர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லமுடியாமல் நீண்டதூரம் அணிவகுத்து நின்றன.

    இதுகுறித்து தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் இந்த பகுதியில் டாஸ்மாக்கடை அமைக்கக்கூடாது என்று கூறினர். அதற்கு போலீசார் சம்மந்தப்பட்டதுறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

    இதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின்னர் போக்குவரத்து சீரானது.

    Next Story
    ×