search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    லாரி மீது கார் மோதல்- ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

    லாரி மீது கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    திண்டிவனம்:

    சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் தியாகேசுவரன் (வயது 56). ரெயில்வே ஊழியர். இவரது மனைவி ஜெயா(55). இவர்களது சொந்த ஊர் நாகர்கோவில் ஆகும். அங்கு உறவினர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க தியாகேசுவரன், ஜெயா மற்றும் குடும்பத்தினர் நாகர்கோவிலுக்கு காரில் சென்றனர்.

    பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை அயனாவரத்தை சேர்ந்த டிரைவர் முருகன் என்பவர் ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் பகுதியில் வந்த போது முன்னால் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் முருகனின் கட்டுப்பாட்டை இழந்த கார், லாரியின் பின்பக்கம் பயங்கரமாக மோதியது. தொடர்ந்து, அங்கு சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில், காரில் பயணம் செய்த, தியாகேசுவரன் (56), அவரது மனைவி ஜெயா (55) ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த தியாகேசுவரனின் மகன் இமானுவேல் (28), உறவினர்கள் ஆனந்த் (28), லிபன் (15), முருகன்(40) ஆகியோர் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இமானுவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு விபத்து

    சென்னை கொளத்தூர் பகுதி டீச்சர் காலனியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 36). கார் டிரைவர். இவர் தனது நண்பர்களான கொளத்தூர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (28), சரவணன் (29), தண்டையார்பேட்டையை சேர்ந்த சத்தியமூர்த்தி (27), அம்பத்தூரை சேர்ந்த அபிஜித் (27) ஆகியோருடன் நேற்று முன்தினம் கடலூருக்கு வந்தார்.

    பின்னர் அங்கிருந்து இரவு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு புறப்பட்டனர். காரை கார்த்திக் ஓட்டினார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே மண்டவாய் பச்சையம்மன் கோவில் அருகே சென்றபோது காரின் முன்பக்க டயர் திடீரென்று வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் சாலையோரம் உள்ள மரத்தில் பயங்கரமாக மோதியது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து காரின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் படுகாயம் அடைந்த கார்த்திக் பிணமாக மீட்கப்பட்டார். படுகாயம் அடைந்த மற்ற 4 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் புதுவை கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி அபிஜித் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×