search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    கொரோனா செலவினங்களுக்கு இடையே தமிழகத்தின் சொந்த வருவாய் உயர்ந்து வருகிறது- எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சி

    கொரோனா தொற்று தொடர்பான செலவினங்களுக்கு இடையே தமிழகத்தின் சொந்த வருவாய் உயர்ந்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தின் கடந்த ஜூலை மாதத்திற்கான நிதி பற்றாக்குறை (கடனை தவிர்த்து), அதாவது மொத்த வருவாய் மற்றும் செலவீனத்தின் வித்தியாசம் ரூ.2,605.34 கோடியாக உள்ளது. இதன்படி கணக்கிடும்போது, மாநிலத்தின் சொந்த வருவாய், ஜூலை மாதத்தில் சாதகமான வளர்ச்சியை காட்டியுள்ளது.

    அதன்படி, 2020-21-ம் ஆண்டு ஜூலை வரை மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை ரூ.21 ஆயிரத்து 833.48 கோடியாக இருக்கும் என்று மத்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாநிலத்தின் சொந்த வரி வருவாய், மத்திய வரிகளில் உள்ள பங்கு உள்ளிட்ட அம்சங்களை கணக்கிட்டால் தமிழகத்தின் மொத்த வருவாய், கடந்த ஆண்டு ஜூலையில் இருந்த ரூ.11 ஆயிரத்து 756.98 கோடியில் இருந்து இந்த ஆண்டு 19.4 சதவீதம் கூடுதலாக அதாவது ரூ.14 ஆயிரத்து 41.98 கோடியாக உயர்ந்துள்ளது.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரூ.7,765.15 கோடியாக இருந்த சொந்த வரி வருவாய், இந்த ஆண்டு ஜூலை மாதம் 8 சதவீதம் உயர்ந்து ரூ.8,387.23 கோடியாக அதிகரித்துள்ளது.

    அதுபோல 2019-ம் ஆண்டு ஜூலையில் ரூ.2,360.40 கோடியாக இருந்த மாநில சரக்கு மற்றும் சேவை வரி (எஸ்.ஜி.எஸ்.டி.) இந்த ஆண்டில் 27 சதவீதம் உயர்ந்து ரூ.2,997.84 கோடியாக அதிகரித்துள்ளது.

    மற்றொரு மாநில வருவாயான கலால் வரி (மது விற்பனை வருவாய்) கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரூ.587.65 கோடியாக இருந்தது. அது, இந்த ஆண்டு ஜூலை மாதம் 18.5 சதவீதம் உயர்ந்து ரூ.696.57 கோடியாக அதிகரித்துள்ளது.

    அதுமட்டுமல்லாமல், பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கான வாட் வரி உள்ளிட்ட விற்பனை வரி ரூ.3,820.27 கோடியில் இருந்து ரூ.4,013.21 கோடியாக உயர்ந்துள்ளது.

    ஆனால் மாநில வரி வருவாயில் முக்கிய அம்சமான முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரிவில், கடந்த ஆண்டு ஜூலையில் ரூ.977.53 கோடி என்றிருந்த வருவாய், 31.8 சதவீதம் குறைந்து இந்த ஆண்டு ஜூலையில் ரூ.667.04 கோடியாக இறங்கியுள்ளது.

    மத்திய வரி வருவாயில் பெரும் பங்கு கடந்த ஆண்டு ஜூலை மாதத்தைவிட இந்த ஆண்டு 8.4 சதவீதம் உயர்வை பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் ரூ.1,622.04 என்றிருந்த வரிப் பங்கு, இந்த ஆண்டில் ரூ.1,757.96 கோடியாக அதிகரித்துள்ளது.

    மாநிலத்தின் வரி வருவாயில் உயர்வு ஏற்பட்டிருப்பதற்கு ஒரு காரணம், மத்திய அரசின் மானிய உதவியை முன்கூட்டியே வழங்கியதாகும். கடந்த ஆண்டு ஜூலையில் காணப்பட்ட ரூ.967.64 என்ற மானிய உதவி, இந்த ஆண்டு ஜூலையில் ரூ.2,989.30 கோடியாக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தின் மொத்த செலவு ரூ.16 ஆயிரத்து 646.59 கோடியாக இருக்கும் நிலையில், மாநிலத்தின் மொத்த வருவாய் ரூ.14 ஆயிரத்து 894.48 கோடியாக இருக்கிறது. ஆனாலும், மாநிலத்தின் வருவாய்ச் செலவில் சம்பளங்கள், மானியங்கள் போன்றவை இன்னும் தொகுப்பாக உள்ளதாக தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    தற்போது தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு செலவினங்களில் ஏற்பட்டுள்ள சவால் கொரோனா பற்றியதாகும். இந்த சவாலான வருவாய் சூழ்நிலையில் அதற்கான செலவு உயர்ந்த வண்ணம் உள்ளது.

    கொரோனா தொடர்பான செலவினம் குறித்து சமீபத்தில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட முதல் துணை நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-21-ம் ஆண்டில் ரூ.3 லட்சத்து 390 கோடி செலவு ஏற்படும் என்று பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டு உள்ளது.

    தற்போது கூடுதல் செலவினம் ரூ.12 ஆயிரத்து 845.20 கோடி ஏற்படும் என்று துணை பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. இதில் கொரோனாவுக்கான செலவு 70 சதவீதமாக அதாவது, ரூ.9,027.08 கோடியாக உள்ளது.

    2020-21-ம் ஆண்டின் முதல் பாதியில் ரூ.48 ஆயிரம் கோடியை தமிழகம் இதுவரை கடனாக பெற்றுள்ளது. அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் மராட்டியம் முதலிடத்தையும் தமிழகம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.

    இந்தநிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில் வெளியிட்ட கருத்து வருமாறு:-

    கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் காணப்பட்ட மாநிலத்தின் சொந்த வருவாயை ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஜூலையில் சாதகமான வளர்ச்சி காணப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இது இந்த அரசின் இடைவிடாத முயற்சியினால் ஏற்பட்டதாகும்.

    தமிழகத்தின் பொருளாதாரம் மேம்படுவதற்கு நாங்கள் தொடர்ந்து கடுமையாக பாடுபடுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×