search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்
    X
    தமிழ்

    காந்தி ஜெயந்தியையொட்டி நடத்தப்படும் புதிர் போட்டியில் தமிழ் புறக்கணிப்பு

    காந்தி ஜெயந்தியையொட்டி நடத்தப்பட உள்ள புதிர் போட்டியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதால் கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    சென்னை:

    காந்தி ஜெயந்தியையொட்டி தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) சார்பில் புதிர் போட்டி நடைபெற இருக்கிறது. இதுகுறித்து மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்த சுற்றறிக்கையை தமிழக அரசு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    காந்தி ஜெயந்தியையொட்டி பள்ளி மாணவர்களை ‘ஆன்-லைன்’ புதிர் போட்டியில் கலந்துகொள்ள அறிவுறுத்துமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களையும் அறிவுறுத்த வேண்டும். இந்த போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி நவம்பர் 1-ந்தேதி இரவு 12 மணி வரை நடக்கிறது. 3 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.

    ஆங்கிலம் மற்றும் இந்தியில் புதிர் போட்டி நடக்கிறது. காந்திகளின் வாழ்க்கை வரலாறு, காந்தியடிகளின் மக்கள் பணிகள், வாழ்க்கையோடு இணைந்த காந்தியடிகளின் கருத்துருக்கள் ஆகிய தலைப்புகளில் புதிர் போட்டி நடைபெறுகிறது. http://gandhiparicha.in/, https://diksha.gov.in/, https://play.google. com/store/apps/details?idicom.discovergandhi.kholkhe ஆகியவை ஆன்-லைன் ‘லிங்க்’ முகவரிகள் ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    காந்தி பிறந்தநாளையொட்டி புதிர் போட்டிகள் நடப்பது நல்ல விஷயம் என்றாலும் போட்டி நடைபெறும் மொழிகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், ‘தமிழகத்தில் தமிழ் மொழியில் இந்த புதிர் போட்டி நடத்தப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சுற்றறிக்கையை தமிழக அரசு புறக்கணித்திருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தி தெரியாத தமிழக மாணவர்கள் எப்படி இந்த தேர்வை எழுதுவார்கள்? இது ஒரு தவறான நடவடிக்கை’ என்றனர்.

    இந்த நடவடிக்கை மாணவர்கள் தரப்புக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
    Next Story
    ×