search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாந்தி வீட்டின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்
    X
    சாந்தி வீட்டின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்

    வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட 2 பெண்களின் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

    நெல்லை அருகே வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட 2 பெண்களின் வீடுகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    நாங்குநேரி:

    நெல்லை அருகே நாங்குநேரியை அடுத்த மறுகால்குறிச்சியைச் சேர்ந்தவர்கள் அருணாசலம் மனைவி சண்முகத்தாய் (வயது 45), சுப்பையா மனைவி சாந்தி (40). இவர்கள் 2 பேரும் உறவினர்கள்.

    சண்முகத்தாய் மகன் நம்பிராஜன், அப்பகுதியைச் சேர்ந்த வான்மதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் வான்மதி குடும்பத்தினர் நம்பிராஜனை கொலை செய்தனர். இதற்கு பழிக்குப்பழியாக நாங்குநேரியில் ஓட்டல் நடத்தி வந்த வான்மதியின் உறவினர்களான ஆறுமுகம், சுரேஷ் ஆகிய 2 பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.

    இந்த இரட்டை கொலை தொடர்பாக சண்முகத்தாய் மகன்கள் ராமையா, சங்கர், சாந்தி மகன்கள் இசக்கிப்பாண்டி, ஆறுமுகம் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தனர். அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் பாதுகாப்பு கருதி அவர்கள் 4 பேரும் வெளியூர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    ஜாமீனில் வந்த 4 பேரையும் பழித்தீர்ப்பதற்காக 12 பேர் கொண்ட மர்ம கும்பல் கடந்த 26-ந் தேதி சண்முகத்தாய், சாந்தி வீட்டிற்குள் புகுந்து நாட்டு வெடிகுண்டு, பெட்ரோல் குண்டுகளை வீசினர். ஆனால், அங்கு ராமையா உள்பட 4 பேரும் இல்லாததால், சண்முகத்தாய், சாந்தி ஆகியோரை அந்த கும்பல் வெட்டி படுகொலை செய்தது.

    இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். நேற்று முன்தினம் சண்முகத்தாய் வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டின் மொட்டை மாடியில் இருந்து ஒரு நாட்டு வெடிகுண்டு கைப்பற்றப்பட்டு, செயலிழக்க செய்யப்பட்டது. இது மீண்டும் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் வெளியூர் சென்ற ராமையா உள்பட 4 பேர் சொந்த ஊருக்கு திரும்பினர். இதை தெரிந்து கொண்டு மர்ம கும்பல் அங்கு வந்து தாக்குதல் நடத்தக்கூடும் என்பதாலும், வேறு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    போலீசார் அந்த பகுதியில் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் சண்முகத்தாய், சாந்தி ஆகியோரின் வீடுகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
    Next Story
    ×