search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புறநகர் ரெயில்
    X
    புறநகர் ரெயில்

    தமிழகத்தில் அக்டோபர் 31-ந்தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு: பள்ளி, புறநகர் ரெயில், சினிமா தியேட்டர்கள் தொடர்ந்து மூடல்

    தமிழகத்தில் அக்டோபர் 31-ந்தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால்தான் தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோடு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகமாக உள்ளது. மேலும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிர் இழப்பும் குறைவாக இருந்து வருகிறது.

    அதனால்தான், பிரதமர், கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய அதிக எண்ணிக்கையில் ஆய்வக பரிசோதனை செய்தல், நோய்த் தொற்றை கட்டுப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் ஆகியவற்றில் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக திகழ்கின்றது என்றும், தமிழ்நாட்டை பார்த்து பிற மாநிலங்கள் செயல்பட வேண்டும் என்றும் அண்மையில் நடைபெற்ற காணொலிக் காட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பாராட்டு தெரிவித்தார்.

    நான் பல்வேறு தினங்களில் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட 12 ஒருங்கிணைப்புக் குழுக்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், பல்வேறு தினங்களில் மாவட்ட ஆட்சியர்களின் காணொலிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், தமிழ்நாட்டில் 30.9.2020 முடிய ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. எனினும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும்,
    பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், 29.9.2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 30.9.2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31.10.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

    இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    மேலும், தமிழகத்தில் புறநகர் ரெயில் சேவைக்கு அனுமதி இல்லை. பள்ளிகள், கல்லூரிகள் திறக்க அனுமதி இல்லை. சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×