search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    செல்போன்கள், மோட்டார் சைக்கிளை பறித்த 4 பேர் கைது

    திண்டுக்கல் அருகே பெண்களை தாக்கி செல்போன்கள், மோட்டார் சைக்கிளை பறித்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பேகம்பூர் ஏ.பி. நகரை சேர்ந்தவர் கிறிஷ்டினா (வயது 27). இவருடைய தோழி வேடசந்தூர் உசேன்ராவுத்தர் தெருவை சேர்ந்த நிஷா (22). இவர்கள் 2 பேரும், திண்டுக்கல் குறிஞ்சி நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கின்றனர். நேற்று முன்தினம் இவர்கள் பணியில் இருந்த போது அந்த நிறுவனத்துக்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் 2 பேரையும் தாக்கிவிட்டு அவர்களிடம் இருந்து 2 செல்போன்களை பறித்து கொண்டதோடு நிறுவனம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் எடுத்துச்சென்றனர்.

    இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 4 பேரும் பாலகிருஷ்ணாபுரம் ரெயில்வே கேட் அருகே பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் 4 பேரையும் மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் திண்டுக்கல் அபிராமிகுப்பத்தை சேர்ந்த கார்த்திகேயன் (35), பாறைமேட்டுத்தெருவை சேர்ந்த விக்னேஷ் (27), திண்டுக்கல் நாடக நடிகர் காலனியை சேர்ந்த கண்ணன் (48), சின்னபள்ளப்பட்டியை சேர்ந்த ராஜா (48) என்று தெரியவந்தது. பின்னர் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து செல்போன்கள், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே, குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா பாராட்டினார்.
    Next Story
    ×