search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    பள்ளிகள் திறப்பு : மாணவர்கள் பத்திரமாக வீடு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

    10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மாணவர்கள் பள்ளிக்கு சென்றுவிட்டு பத்திரமாக வீடு திரும்புவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மாணவர்கள் பள்ளிக்கு சென்றுவிட்டு பத்திரமாக வீடு திரும்புவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    தி.மு.க. தலைவர்மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் பள்ளிகள் அக்டோபர் 1-ந் தேதி முதல் திறக்கப்படும் என்று அரசு ஆணை வெளியிடப்பட்ட பிறகு “50 வயதிற்கு மேல் உள்ள ஆசிரியர்கள் பங்கேற்கலாமா என்பதை சுகாதாரத்துறை அமைச்சர் முடிவு செய்வார்”; “பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்து முதல்-அமைச்சர் முடிவு செய்வார்” என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்துள்ள பேட்டிகள் மாணவர்களையும், பெற்றோர்களையும் மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்தி, மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

    கொரோனா பேரிடரால் பள்ளிகள் நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளன. தங்கள் குழந்தைகள் நேரடியாக வகுப்பறை கல்வி கற்க முடியாமல் இருக்கிறதே என்று பெற்றோர் கவலைப்படுகிறார்கள். இதுபோன்ற நேரத்தில், அக்டோபர் 1-ந் தேதி பள்ளிகளை திறக்கிறோம் என்று அறிவித்து விட்டு, இப்படி குழப்பமான பேட்டிகளை அமைச்சர் கொடுத்து வருவது சரியல்ல.

    மாணவர்களின் பாதுகாப்பை இந்த அரசு ஏதோ விளையாட்டாக நினைத்துச் செயல்படுகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு “வழிகாட்டுதல் மட்டும் வழங்கப்படும்” என்பதும், “பெற்றோர் சம்மத கடிதம் எழுத்துபூர்வமாக பெற்று வந்தால்தான் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்” என்றும், அரசு ஆணையில் வெளியிடப்பட்டுள்ள நிபந்தனைகள் மாணவர்களின் பாதுகாப்பை பெற்றோர் தலையில் போட்டு நாம் தப்பித்துக்கொள்வோம் என்ற அ.தி.மு.க. அரசின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

    பள்ளிகள் திறக்க வெளியிடப்பட்டுள்ள 24-ந் தேதியிட்ட அரசு ஆணை, பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கே தெரியாதோ என்ற சந்தேகம் வருகிறது. ஆசிரியர்களில் யாரெல்லாம் பள்ளிகளுக்கு செல்லவேண்டும் என்பதை சுகாதாரத்துறை அமைச்சர் முடிவு செய்வார் என்பதும், பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்து முதல்-அமைச்சர் முடிவு செய்வார் என்பதும், “பள்ளிகளை திறக்கும் இந்த அரசு ஆணை” எவ்வித ஆலோசனையும் இன்றி பல்வேறு துறைகளுக்கு இடையில் முன்கூட்டியே கலந்தாலோசனையும் இன்றி வெளியிடப்பட்டுள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது.

    “பள்ளிகள் திறப்பதே மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதற்கு இல்லை. சந்தேகங்களைக் கேட்டு தெரிந்து கொள்வதற்கே” என்றும், “ஆன்லைன் மூலமும் சந்தேகங்களை கேட்டுக்கொள்ளலாம்” என்றும் கூறிவிட்டு ஏன் இப்படி அவசர கதியில் மாணவர்களை பள்ளிக்கு வரச் சொல்கிறது அரசு என்பதும் புரியாத புதிராக இருக்கிறது. மாணவ- மாணவிகளின் எதிர்காலத்துடன் கொரோனா பேரிடர் ஒருபுறம் விளையாடுகிறது என்றால் அ.தி.மு.க. அரசு இன்னொரு புறம் விபரீத விளையாட்டை நடத்திக்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    ஆகவே 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான பள்ளிகளை அக்டோபர் 1-ந் தேதி முதல் திறக்க முடிவு செய்துள்ள அ.தி.மு.க அரசு மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோரின் பாதுகாப்பை மிக கவனமாக, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், உறுதிசெய்ய வேண்டும்.


    கொரோனா எண்ணிக்கை சென்னையில் மீண்டும் அதிகமாகிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பெற்றோர் பதற்றத்தில் இருக்க முடியாது.

    “எழுத்துபூர்வமாக பெற்றோரிடம் அனுமதி பெற்றுத்தானே வந்தீர்கள்” என்று மாணவர்களின் உயிர் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்துவிடாமல் அ.தி.மு.க. அரசு தனது பொறுப்பை தட்டிக்கழித்து விடாமல் மாணவர்கள் ஒவ்வொருவரும் பள்ளிக்கு சென்றுவிட்டு, பத்திரமாக வீடு திரும்புவதை உறுதி செய்திடும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×