search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மண்ணெண்ணெய்
    X
    மண்ணெண்ணெய்

    ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் விலை உயர்கிறது- தமிழக அரசு உத்தரவு

    ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் விலை அக்டோபர் மாதம் முதல் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் விலை அக்டோபர் மாதம் முதல் உயர்த்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர், சென்னை தவிர அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    சென்னை ஐகோர்ட்டின் உத்தரவின் அடிப்படையில், மண்ணெண்ணெய் மொத்த வணிகர்களின் ஆதாய விளிம்புத் தொகை மற்றும் போக்குவரத்து கட்டண ஆதாய விளிம்புத் தொகை ஆகியவை உயர்த்தி வழங்கப்பட்டதன் அடிப்படையில், மண்ணெண்ணெய் சில்லரை விற்பனை விலையை உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    எண்ணெய் நிறுவனங்களால் பொதுவினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மண்ணெண்ணெய் விற்பனை விலையை உயர்வு செய்து ஆணையிடப்பட்டது.

    அதன்படி, சென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் ரேசன் கடைகளில் வரும் அக்டோபர் 1-ந் தேதி முதல், ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெயின் சில்லரை விற்பனை விலையை லிட்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.15 முதல் அதிகபட்சமாக ரூ.16.50 வரை உயர்த்தி விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    எனவே உங்களின் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மண்ணெண்ணெய் வணிகர்களுக்கும் எண்ணெய் நிறுவனங்களால் வழங்கப்பட்ட கொள்முதல் பட்டியலின் அடிப்படையில் மண்ணெண்ணெய் விலையை திருத்தி நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

    ரேசன் கடைகளில் நுகர்வோருக்கான மண்ணெண்ணெய் சில்லரை விற்பனை விலையை திருத்தி நிர்ணயம் செய்யும்போது, சில்லரை வணிகர்களுக்கான ஆதாய விளிம்புத் தொகை, போக்குவரத்து கட்டண ஆதாய விளிம்புத் தொகை அனுமதிக்கப்பட வேண்டும்.

    இவற்றின் விளிம்புத் தொகையை உயர்த்தி ஆணை பிறப்பிக்கப்பட்டதால், அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் ரேசன் அட்டைதாரருக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் சில்லரை விற்பனை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    அதன்படி, ரேசன் கடை மண்ணெண்ணெய் லிட்டர் ஒன்றுக்கு ரூ.15 முதல் ரூ.16.50 வரை விலை நிர்ணயிக்கப்படும். ஒரே இடத்தில் வெவ்வேறு விலையில் சில்லரை விற்பனை விலை நிர்ணயம் செய்வதை தவிர்ப்பதற்காக, பேரலில் இருப்பு வைத்து விற்பனை செய்யும் மொத்த வணிகர், நிலத்தடியில் இருப்பு வைத்து விற்பனை செய்யும் வணிகர் ஆகியோருக்கு நிர்ணயித்தபடி ஆதாய விளிம்புத் தொகையை அனுமதித்து, சில்லரை விற்பனை விலையில் அதிகரிக்கப்படும் விலையை (லிட்டருக்கு 0.11 பைசா) சில்லரை வணிகர்களுக்கான கூடுதல் ஆதாயத்தில் சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தற்போது ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் லிட்டர் ரூ.13.70 என்று விற்பனை செய்யப்படுகிறது. தற்போதுள்ள உத்தரவுப்படி, அக்டோபர் முதல் அதன் விலை லிட்டருக்கு ரூ.1.30 முதல் ரூ.2.80 வரை உயர்கிறது.
    Next Story
    ×