search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனி
    X
    பழனி

    மதுரையில் தலையில் கல்லை போட்டு பிரபல ரவுடி படுகொலை

    மதுரையில் தலையில் கல்லை போட்டு பிரபல ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    மதுரை தெற்குவாசல் காஜா தெருவை சேர்ந்தவர் பழனி என்ற சரவணக்குமார் (வயது 29). பிரபல ரவுடியான இவர் கூலி வேலை பார்த்து வந்தார்.

    நேற்று நள்ளிரவு பழனி மதுரை காஜியார் தோப்பு முதல் தெருவில் உள்ள கிருதுமால் நதி கால்வாய் அருகே நடந்து சென்றார்.

    அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் 4 மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அவர்கள் பழனியை வழி மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் முற்றியது.

    இதில் ஆத்திரம் அடைந்த மர்ம கும்பல் பழனியை சரமாரியாக தாக்கியது. இந்த தாக்குதலில் நிலைகுலைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார். அப்போது மர்ம கும்பல் அருகில் கிடந்த பாறாங்கல்லை தூக்கி பழனி தலையில் போட்டது. இதில் படுகாயம் அடைந்த பழனி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக தகவலின் பேரில் தெற்கு வாசல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    பழனி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை கொன்ற மர்ம கும்பல் யார் என்று தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலையாளிகளை பிடிக்க போலீசார் நாலாபுரமும் வலை விரித்துள்ளனர்.

    போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி. டி.வி. கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    படுகொலை செய்யப்பட்ட பழனி மதுரையில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீது ஜெய்ஹிந்த் புரம், தெற்குவாசல் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, பயங்கர ஆயுதங்களுடன் திரிந்தது, அடி-தடி உள்பட 8-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    படுகொலை செய்யப்பட்ட பழனிக்கு திருமணம் ஆகவில்லை. தாய் பூங்காவனத்துடன் வசித்து வந்தார். பழனியின் தந்தை பொன்னாங்கன் கடந்த ஓரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார்.

    பொன்னாங்கன்- பூங்காவனம் தம்பதிக்கு தேவக்கனி, மீனா மற்றும் பழனி ஆகிய 3 பேர் உள்ளனர். இதில் தேவக்கனிக்கு மற்றும் மீனாவுக்கு திருமணமாகி விட்டது.

    மீனா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தாய் வீட்டில் கடந்த 6 ஆண்டுகளாக வசிக்கிறார்.

    பழனி நேற்று இரவு 10 மணியளவில் கடையில் இருந்து புரோட்டா வாங்கி வந்து தாய்-தங்கைக்கு சாப்பிட கொடுத்து உள்ளார். அதன் பிறகு தாய் பூங்காவனத்திடம் வெளியே சென்று விட்டு வருகிறேன் என்று கூறி விட்டு சென்றார். நள்ளிரவு 11 மணி வரை பழனி வீட்டுக்கு வராததால் தாய் பூங்காவனம் மகனை தேடி அழைந்தார்.

    அப்போது பழனி தலை நசுங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மகனை காப்பாற்றும்படி அங்கு இருந்தவர்களிடம் கதறினார்.

    அக்கம் பக்கத்தினர் இதுதொடர்பாக 108 ஆம்புலன்சுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இருந்தபோதிலும் ஆம்புலன்சு தாமதமாக வந்து சேர்ந்தது. அவர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு, பழனி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மகன் உடலை கண்டு தாய் கதறி அழுதார்.

    பழனிக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையில் ஏற்கனவே முன்விரோதம் உள்ளது. பழனியை யார்- எதற்காக கொன்றனர்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக தெற்கு வாசல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×