search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    தனியார் மருத்துவமனை பெண் ஊழியரிடம் நகை பறிப்பு

    கத்தியை காட்டி மிரட்டி தனியார் மருத்துவமனை பெண் ஊழியரிடம் நகையை பறித்துச்சென்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி அருகே உள்ள விஸ்வரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் மனைவி ஜெயா (வயது 31). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவ பதிவேடு பிரிவில் வேலை செய்து வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் மாலை பணியை முடித்துவிட்டு அரசு டவுன் பஸ்சில் விழுப்புரத்தில் இருந்து ராதாபுரம் வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து வயல்வழி பாதை வழியாக விஸ்வரெட்டிப்பாளையத்திற்கு நடந்து சென்றார்.

    அப்போது மதுரப்பாக்கம் எல்லை கோழிப்பண்ணை அருகே சென்றபோது அந்த வழியாக பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் திடீரென ஜெயாவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் கிடந்த 2½ பவுன் தாலிச்சங்கிலியை பறித்தனர். உடனே ஜெயா, திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடி வருவதற்குள் அந்த வாலிபர்கள் இருவரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.80 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் ஜெயா புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி, சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×