search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    உணவு தரச்சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

    உணவு தரச்சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உணவு பொருள் பாதுகாப்பு இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
    திரு.வி.க.நகர்:

    சென்னை கோடம்பாக்கம் பூபதி நகரைச் சேர்ந்தவர் மோகன் (வயது 33). இவர், திருவேற்காடு சன்னதி தெருவில் மளிகை கடை மற்றும் 2 சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இதிலுள்ள ஒரு கடைக்கு உணவு தரச்சான்றிதழ் பெற கடந்த மே மாதம் ஆன்லைன் மூலம் பதிவு செய்தார். இதுதொடர்பாக அம்பத்தூர் உணவு பொருள் பாதுகாப்பு இன்ஸ்பெக்டர் லோகநாதன் (51) என்பவர் நேரடியாக மோகனிடம் சென்று, ரூ.10 ஆயிரம் கொடுத்தால் உங்களுக்கு சான்றிதழ் தர உதவி செய்வேன் என்றார்.

    ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மோகன், ஆன்லைன் மூலமாகவே சான்றிதழுக்கான கட்டணம் செலுத்தினார். இதையடுத்து நியமிக்கப்பட்ட அலுவலர் கவிக்குமார் என்பவர் மோகனுக்கு சான்றிதழ் வழங்க அனுமதி அளித்தார்.

    உயர் அதிகாரி கவிக்குமாரிடம் இருந்து சான்றிதழை வாங்கிய லோகநாதன், அதனை மோகனிடம் கொடுத்து விடுவதாக கூறினார். பின்னர் அவர், மீண்டும் மோகனிடம் சென்று சான்றிதழ் தயாராகிவிட்டது. அது வேண்டுமெனில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் என்றார்.

    இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மோகன், இதுபற்றி ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு குமரகுரு என்பவரிடம் புகார் செய்தார். இதையடுத்து லோகநாதனை கையும், களவுமாக பிடிக்க ரசாயன பொடி தடவிய ரூ.10 ஆயிரத்தை மோகனிடம் கொடுத்து அதை லஞ்சமாக லோகநாதனிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.

    லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் ஜி.டி.அபிகேயின், வள்ளிநாயகம் உள்பட 10 பேர் கொண்ட குழு மோகனை பின்தொடர்ந்து சென்றன.

    அதன்படி நேற்று அம்பத்தூர் ஒரகடத்தில் உள்ள கேட்டரிங் கல்லூரியில் லோகநாதனிடம் லஞ்ச பணத்தை மோகன் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் பாய்ந்து சென்று லோகநாதனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் லோகநாதன் வைத்திருந்த கைப்பையில் சோதனை செய்ததில் அம்பத்தூர் பகுதியில் உள்ள ஓட்டல்கள் சார்பில் கொடுக்கப்பட்ட சுமார் ரூ.90 ஆயிரம் இருந்தது.

    அதேநேரம் புழலில் உள்ள லோகநாதன் வீட்டில் மற்றொரு குழுவினர் ஆய்வு செய்ததில் பல்வேறு ஓட்டல்களின் பெயர் எழுதப்பட்ட கவருடன் ரூ.46 ஆயிரம் ரூபாய் இருந்தது கண்டறியப்பட்டது. லோகநாதன் செல்போனை ஆய்வு செய்ததில் அவரது வாட்ஸ்அப் மற்றும் பேசப்பட்ட பதிவுகளில், அம்பத்தூர் பகுதியில் உள்ள பெரும்பாலான ஓட்டல்களை மிரட்டி பிரியாணி, மளிகை பொருட்கள், உணவு பொருட்கள், பணம் வாங்கியது தெரியவந்தது.

    பின்னர் கைதான லோகநாதனை திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று கொரோனா பரிசோதனை செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்திய பிறகு சிறையில் அடைத்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரி கவிக்குமார் தலைமறைவாகி விட்டார். அவரை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×