search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    மதுரை அருகே காவலாளிகளை கட்டிப்போட்டு டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி

    மேலூர் அருகே காவலாளிகளை கட்டிப்போட்டு டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி நடந்தது. கொள்ளையர்கள் பூட்டை உடைக்க முடியாததால் ரூ. 15 லட்சம் மது பாட்டில்கள் மற்றும் ரொக்க பணம் தப்பியது.

    மதுரை:

    மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த கிடாரிப் பட்டியில் மாங்குளம் செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இந்த கடையில் ரஞ்சித்குமார், சேட் ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று இரவு இவர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர். இந்த கடையில் அதே பகுதியை சேர்ந்த பொன்னையன் (வயது 54), பொன்னமராவதி (52) ஆகிய 2 பேரும் காவலாளிகளாக உள்ளனர்.

    நேற்று இரவு இவர்கள் பணியில் இருந்தனர். இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் 4 கொள்ளையர்கள் அங்கு வந்தனர். திடீரென அவர்கள் காவலாளிகள் 2 பேரையும் தாக்கினர். பின்னர் அவர்களை கட்டிலுடன் சேர்த்து கட்டிப்போட்டனர்.

    காவலாளிகள் ‘எங்களை காப்பாற்றுங்கள்’ என்று சத்தம் போட்டனர். உடனே கொள்ளையர்கள் அவர்கள் சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை வைத்து திணித்தனர். நள்ளிரவு நேரம் என்பதால், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் யாரும் உதவிக்கு வரவில்லை.

    இதையடுத்து கொள்ளையர்கள் 4 பேரும் டாஸ்மாக் கடையின் பூட்டை வெல்டிங் எந்திரம் மூலம் வெட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் போராடியும், அவர்களால் பூட்டை திறக்க முடியவில்லை. அப்போது இருசக்கர வாகன நடமாட்டம் இருந்தது. இதனை பார்த்த 4 கொள்ளையர்களும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது தொடர்பாக கிடாரிப்பட்டி டாஸ்மாக் மேற்பார்வையாளர் குருந்தலிங்கம் மேலவளவு போலீசில் புகார் செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதிராஜா, இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கடையில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் யார்? என்று தெரியவில்லை. கடையின் பூட்டை உடைக்க முடியாததால், கடைக்குள் இருந்த ரூ. 15 லட்சம் மதிப்பிலான ரொக்கப்பணம் மற்றும் மதுபாட்டில்கள் தப்பின.

    இதுதொடர்பாக மேலவளவு போலீசார் டாஸ்மாக் கடை ஊழியர்கள் ரஞ்சித்குமார், சேட் மற்றும் இரவு நேர காவலாளிகள் ஆகிய 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    டாஸ்மாக் கடையில் இன்று அதிகாலை நடந்த கொள்ளை முயற்சி சம்பவம், மேலூர் பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×